ஆடிக் கிருத்திகை விழா: திருத்தணி கோயிலில் திரண்ட பக்தர்கள்
திருத்தணி: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் விழா ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். காவடி எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுவது திருத்தணி. இங்கு ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்றைக்கு கிருத்திகை விழா என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நேர்த்திக்கடன்
முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் காவடி சுமப்பது போல முருகன் நம் கஷ்டங்களை சுமப்பார் என்பது முன்னோர் வாக்கு அதனால்தான் ஆடிக்கிருத்திகை அன்று பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருத்தணியில் குவிந்துள்ள பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். ஆடிக் கிருத்திகை விழாவை தொடர்ந்து மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
போக்குவரத்து
ஆடி கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி - அரக்கோணம், திருத்தணி - ரேணிகுண்டா மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் விழுப்புரம் கோட்டம் சார்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், பள்ளிப்பட்டு, அன்வர்திகான்பேட்டை, சத்யவேடு, திருப்பதி, சோளிங்கர், புத்தூர், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து, பல்வேறு வழித் தடங்களில், 300 க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் 12ம் தேதி வரை இயக்கப்படும் என்று விழுப்புரம் கோட்ட திருவள்ளூர் மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். மேலும் நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள் வசதிக்காக மலையடிவாரத்தில் இருந்து கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயிலுக்கு 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications