துபாயில் வானலை வளர்தமிழின் கவியரங்கம், சிறப்பிதழ் வெளியீட்டு விழா
துபாய் கிரஸென்ட் பள்ளி முதல்வரும் தமிழ் ஆர்வலருமான கலிஃபுல்லா, குற்றாலம் அஸ்ரப் அலி மற்றும் புலவர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர்கள் கலிஃபுல்லா, குற்றாலம் அஸ்ரப் அலி, புலவர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் ஆகியோருக்கு அமைப்பின் சார்பில் காவிரிமைந்தன், ஜெயராமன் ஆனந்தி மற்றும் சிம்மபாரதி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
தொடர்ந்து "விடியல்" இதழின் பிரதிகளை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட முறையே வானாதிபுரம் ஹனிபா, காயல் வாஹித், திருமதி கலிஃபுல்லா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். வாழ்த்துரை வழங்கிய குற்றாலம் அஸ்ரப் அலி வானலை வளர்தமிழின் செயல்பாடுகளில் தலைவர் கோவிந்தராஜனின் பங்கு குறித்து பாராட்டிப் பேசியதுடன், துபாயில் தமிழை முதல் மொழியாகக் கொண்டு செயலாற்றி வரும் கிரஸென்ட் பள்ளியையும் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய புலவர் ஜின்னாஹ் அவர்கள் எழுத்தாற்றல் இறைவன் கொடுத்த வரம் அதை நாம் நல்வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றதுடன், தொடர்ந்து தமிழுக்கு சேவையாற்றி வரும் வானலை வளர்தமிழின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசினார்.
இறுதியாக பேசிய கலிஃபுல்லா, தான் தமிழ் மீது கொண்ட பற்றைப் பற்றி பேசினார். மேலும் கல்லூரி நாட்களில் நண்பர்களால் கவிஞர் என்று அழைக்கப்பட்ட நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், திரும்பவும் தன்னை கவிதை எழுதத் தூண்டும் வானலை வளர்தமிழின் செயல்பாட்டை பாராட்டியதுடன், தொடர்ந்து 15 ஆண்டுகளாக துபாயில் தமிழை முதல் மொழியாகக் கொண்டு செயலாற்றி வரும் கிரஸென்ட் பள்ளியின் தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் தமிழ்த்தேரில் எழுத தான் பரிந்துரைக்கப் போவதாக தெரிவித்தார்.
அடுத்து நிகழ்ந்த "விடியல்" கவியரங்கை கவிஞர் சந்திரசேகர், குறிஞ்சி தாசன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர். அதில் கவிஞர்கள் ஜெயராமன் ஆனந்தி, சிம்மபாரதி, ஜமால், காவிரிமைந்தன், ஜியாவுதீன், தஞ்சாவூரான், குற்றாலம் அஸ்ரப், சந்திரசேகர் மற்றும் குறிஞ்சி தாசன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவுற்றது.
குறிப்பாக சிறுமி ஆனிஷா எழுதிய முதல் கவிதையை அவர் தந்தை ஜியாவுதீன் வாசித்துக் காட்ட அது அவையோரின் வெகுவான பாராட்டைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களின் அறிமுக நிகழ்ச்சியில் முருகேசன், முகைதீன் அப்துல் காதர் மற்றும் முகம்மது ரபீக் ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்தி, சிற்றுரையாற்றினார்கள். நிகழ்ச்சியை காவிரிமைந்தன் தொகுத்து வழங்க, கீழை ராஸா நன்றியுரையாற்றினார்.
காவிரிமைந்தன், சிம்மபாரதி, கீழை ராஸா மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications