இரவில் காயும் முழு நிலா.. எனக்கு மட்டும் சுடு நிலா!

சுள்ளுன்னு வெளியில் வெயில்.. வீட்டுக்குள் போரடிக்கும் மத்தியான நேரம்... காதில் வந்து விழுந்தது அந்தப் பாட்டு -அழகான தென்றல் போல. 'நம்மாளு' மியூசிக் இல்லையென்றாலும் கூட கேட்டு ரசித்த 'பிறத்தியார்' பாடல்களில் இதுவும் ஒன்று.
படம் காதல் தேசம்.. நிறையப் பேருக்கு இந்தப் படம் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். வினீத்தின் அழகான நடிப்பு.. கவிதையாக வந்து போன தபு... ப்யூட்டிபுல் படம். காதலை விட அதன் வலியை அழகாக சொல்லியிருப்பார்கள் இப்படத்தில். அந்தப் படத்துப் பாட்டுதான் இது.
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு...
பூவுடன் மெல்ல நீ பேசு...
கரையின் மடியி்ல் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
காதலியைத் தூங்க வைக்க மெனக்கெடும் இந்தக் காதலன், அவன் தூங்காமல் கஷ்டப்பட்ட கதைதான் இது. நிஜத்திலும் கூட இப்படித்தானே நடக்கிறது.
என் இதய தேவதையே
இனிமையான கனவுகளுடன்
இதமாக தூங்கு என்று குட் நைட் சொல்ல எந்தக் காதலனும் தவறுவதில்லை. அவனுடைய தேவதை தூங்கப் போகும் அழகைப் பார்த்து விட்டு அவன் கனவுக்குள் காலடி எடுத்து வைத்துக் கொள்கிறான். பிறகு விடிய விடிய விழித்திருந்து, மனசெல்லாம் காதலியின் நினைவுகளோடு அரைகுறைத் தூக்கத்தில் விழுந்து அவஸ்தைப்படுகிறான்..
ஆனால் அதிலும் கூட ஒரு பெரும் சுகம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா...?
காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடுநிலா
என்று அவன் சொல்லும்போது அதில்தான் எத்தனை வலி.. எத்தனை ஏக்கம்... ஏன் இந்தக் கஷ்டம் என் தேவதையே... கஷ்டம் மட்டும்தான் காதலா... உன்னைத் தாலாட்டிய தென்றலும், முழு நிலவும் என்னை சுட்டுச் செல்கிறதே கண்ணே என்று அவன் கலங்கும்போது உண்மையில் காதலின் வலி சொல்லாமலேயே புரியும்.
மாலை வானில் கதிரும் சாயும்
மடியி்ல் சாய்ந்து தூங்கடா
காதலன் ஒவ்வொருவரும் தாய் போலத்தான். உனக்கேன் கண்ணே கவலை.. உனக்காக என் இதயம் இருக்கிறது, என் தோள் இருக்கிறது.. மடியில் சாய்ந்து மனக் கவலை போக்கி அழகாக தூங்கடா என் செல்லமே என்று அவன் சொல்லும்போது அந்தப் பாசத்தி்லதான் எத்தனை காதல்.. அன்பு...
சொல்ல வார்த்தை கோடிதான்
உன்னை நேரில் கண்டால் மெளனமேன்
நிறையப் பேருக்கு ஒரு கெட்டப் பழக்கம் இருக்கும். அதாவது நேரில் சந்திக்கும் வரை நன்றாகத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நேரில் சந்திக்கும்போது குறைச்சலாகப் பேசுவார்கள்... மெளனமே பெரும்பாலான நேரத்தில் அவர்களின் பாஷையாக இருக்கும். அப்படி இருக்கக்கூடாது... காதலில் வெளிப்படை அவசியம். வெளிப்படையாக பேசிக் கொண்டால்தானே உண்மையான காதலாக அது இருக்க முடியும்... ஊமையாக இருந்தால் எப்படி காதலை பரிமாறிக் கொள்ள முடியும்...?
தூங்க வைக்கப் பாடினேன் நான்
தூக்கமின்றி வாடினேன்...
கடைசியில் இதுதானே பல ஆண்களின் கிளைமேக்ஸாக உள்ளது. நீ தூங்கப் போ .. நான் உன்னை நினைத்து இளைப்பாறுகிறேன்... என்பதுதான் பெரும்பாலான காதலர்களின் வேலையாக மாறிப் போயிருக்கிறது...
அருமையான பாடல்.. அழகான காதலைப் போற்றிய பாடல்.. காதல் வலியை மென்மையாக சொன்ன வாலியின் அழகுப் பாடல்.. சான்ஸ் கிடைச்சா கேட்டுப் பாருங்க.!












Click it and Unblock the Notifications