முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும்: துபாயில் இந்தியர்கள் தீர்மானம்
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை தேரா கிளையின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 66வது நிறுவன நாள், ஏப்ரல் 02 கோரிக்கை பேரணி விழிப்புணர்வு கருத்தங்கம் மற்றும் மறைந்த மாநில செயலாளர் கமுதி பஷீர் இரங்கல் பிரார்த்தனை கூட்டம் அல் அயாத் ஹோட்டலில் 28.03.2013 அன்று மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறக்கட்டளை அறங்காவலர் அய்யம்பேட்டை வாலன் ஜே. ஜெய்லானி பாட்சா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத் தலைவர் களமருதூர் சம்சுத்தீன் ஹாஜியார், தேரா பகுதி செயலாளர்கள் குண்டு காசிம் ராஜாஜி, நெல்லை ஷேக் சிந்தா, துபாய் கிளை மக்கள் தொடர்பு செயலாளர் ஜெ.முஹைதீன் பாட்சா, அபுதாபி மக்கள் தொடர்பு செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெளலவி கலீலுல்லாஹ் ஆலிம் அவர்கள் கிராத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. விழாக்குழு செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரகத் அலி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை ஷார்ஜா மண்டல செயலாளர் தஞ்சை பாட்சா கனி தொகுத்து வழங்கினார்.

அமீரக காயிதே மில்லத் பேரவை அல்- கூஸ் பகுதி செயலாளர் திண்டுக்கல் ஜமால் மைதீன் இன்றைய காலகட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அவசியம் குறித்து விளக்கமாக உரையாற்றினார். கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா தனது உரையில் மறைந்த கமுதி பஷீர் அவர்களின் சமூக பணிகள் குறித்தும், சிறைச்சாலைகளில் நம் சமூதாய இளைஞர்களின் நிலை குறித்தும், அவர்கள் விடுதலைக்காக இந்திய முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ போராட்டங்கள் குறித்தும், வி.களத்தூரில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் எம்.பி. எடுத்த சமாதான நடவடிக்கைகைகள் குறித்தும் மிக விரிவாக எடுத்துக் கூறினார்.
அமைப்பு செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் முஸ்லிம் லீக் கண்ட போராட்ட களங்களையும், அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு பெற தாய்ச் சபையே காரணம் என்றும் ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் கூறினார்.
அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் அதன் தலைவர்களும் சமுதாய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பாங்கு குறித்தும் அதனால் சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்தும், இட ஒதுக்கீடு. மதுவிலக்கு ஆகிய விஷயங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்ட பணிகள் குறித்தும் விளக்கினார்.
பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா அவர்கள் தனது உரையில் அமீரக காயிதே மில்லத் பேரவை அமீரகத்தில் செய்து வரும் சமுதாயப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்புரையாற்றிய அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் 'சேவை செம்மல்' குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்கள் தனது உரையில் மறைந்த முஸ்லிம் லீக்கின் மாநில செயலாளர் கமுதி பஷீர் அவர்களின் இயக்க பணிகள் குறித்து உணர்ச்சி ததும்ப நினைவு படுத்தினார்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தஞ்சை பாட்ஷா கனி, அய்யம்பேட்டை குண்டு ராஜாஜி காசிம் ஆகியோருக்கும், துணை நின்ற இராமநாதபுரம் பரக்கத் அலி, ரஹ்மத்துல்லா, சஹாப்தீன், நெல்லை ஷேக் சிந்தா, வழுத்தூர் முஹைதீன் பாட்ஷா, திண்டுக்கல் ஜமால் முஹைதீன் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏப்ரல் 02 அன்று நடைபெறும் முப்பெரும் கோரிக்கை பேரணி, ஆர்பாட்டங்கள் சிறப்புற நடத்திட அரும்பாடுபட்டு வரும் மாநில மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இந்த கருத்தரங்கம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது .
2. ஏப்ரல் 2 பேரணியில் சமுதாய மக்களை அனைவரையும் பங்கேற்க செய்ய தமிழகத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்தார்களும் தயாராக இருப்பது கண்டு இக்கருத்தரங்கம் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.
3. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க தமிழக அரசையும், அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இந்தியா முழுவதும் பல்லாண்டுகள் சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ள அப்பாவிகளை விடுதலை செய்யுமாறும் இந்திய அரசையும், தமிழக அரசையும் இக்கருத்தரங்கம் வலியுறித்தி கேட்டுக் கொள்கிறது. அனைத்து தீமைகளுக்கும் மூளையாக விளங்கும் மதுவை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அமீரக காயிதே மில்லத் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் காயல் நூஹு ஹாஜியார் நன்றி கூற துஆ உடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியில் மதுக்கூர் ஜமாஅத் தலைவர் ரஹ்மத்துல்லா, முத்துப்பேட்டை ஜமாஅத் தலைவர் ஃபசுல் ரஹ்மான், திருநெல்வேலி இஷாக், துபாய் சோனாப்பூர் கிளை செயலாளர் ரஹ்மத்துல்லா, சகாபுதீன், தேரா பகுதி வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, அபுதாபி முஸப்பா பகுதி செயலாளர் தேவிப்பட்டிணம் நிஜாம் அக்பர், அய்யம்பேட்டை ஜாபர் அலி, மெய்ஞான சபையினர் உளிட்ட அமீரகத்தில் உள்ள திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத் அங்கத்தினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications