மார்கழி பூஜை: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்
திருப்பாவை பாடல் - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பொருள்:
முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.
திருவெம்பாவை - பாடல் 10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
பொருள்:
சிவன் கோவிலில் பணி செய்யும் குற்றமில்லாத குலத்தில் பிறந்த சிறுமிகளே! கீழ் உலகங்கள் என்று அழைக்கப்படும் பாதாள உலகங்கள் ஏழிற்கும் கீழே, சொல்லமுடியாத ஆழத்தில் தன் மலர் போன்ற அடிகளையும், எல்லா உயரமான பொருட்களுக்கும் மேலே மலர் சூடிய தன் முடியையும் கொண்டவன் சிவன்.
அவன் ஒர் உடலில் பாதியில் உமையவளையும் கொண்டிருப்பதால், அவன் ஒருவனல்லன், ஒரு உருவத்தை மட்டுமே கொண்டவனும் அல்லன்.
வேதம் முதற்கொண்டு எல்லா வகையான பாடல்களால் அவனைப் போற்றித் துதித்தாலும், முழுமையாக ஓதி உணர்வதற்கு அரியவன். அவன் தோழனாகவும் இருப்பான், தொண்டர்களின் உள்ளத்திலும் இருப்பான்.
இத்தகைய பெருமை கொண்ட அவனது ஊர் , பேர் என்ன? அவனுக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவனைப் பாடும் வழிமுறைகள் என்ன?












Click it and Unblock the Notifications