மலேசியாவில் பிரம்மாண்ட இணையவழி நிகழ்ச்சி...அசர வைத்த பிரம்ம குமாரிகள்
கோலாலம்பூர் : பிரம்ம குமாரிகள் அமைப்பின் மலேசிய கிளை சார்பில் ஜனவரி 24 அன்று உலக அளவிலான பிரம்மாண்ட பொது மன்ற நிகழ்ச்சி, இணைய வழியில் நடத்தப்பட்டது.
புதிய உணர்வுடன் இணைவதற்கான சரியான தருணம் என்பதை மைய கருத்தாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 5 கண்டங்களில் இருந்தும் 28 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். 12 மணி நேரத்திற்குள் ஏறக்குறைய 2000 பேர் இந்த நிகழ்வினை நேரலையில் பார்த்துள்ளனர்.
ஆஸ்திரேலியா பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகியான சார்லி ஹோக், அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சிறந்த இணைவிற்கான நோக்கம் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து மலேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் வேத ஜோதிட ஆலோசகர் டாக்டர் ஸ்டீபனி என்ஜி சோ லீ, அறிவியல் மற்றும் வேத ஜோதிவியல் அடிப்படையில் இந்த இணைவு மனித குலத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றி சிறப்புரையாற்றினார்.
அறிவியலாளர்கள், ஆன்மிக அறிஞர்கள், ஜோதிடர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பலர் இந்நிகழ்வில் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு சார்லி, சிறப்பாக பதிலளித்தார்.
புகழ்பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானியும், பேராசிரியரும், எழுத்தாளருமான கண்ணன் நாராயணனின் பேச்சு, பலரும் ரசிக்கும்படியாக அமைந்தது. அறிவியல், ஆன்மிகம் மற்றும் ஜோதிடவியல் துறைகளை சேர்ந்தவர்கள் ஒரே சமயத்தில் ஆன்மிக ஒன்றுகூடல் குறித்த அவசியம் பற்றிய விஷயங்களை பேசியது அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளதக்கதாக அமைந்தது.
இத்தகைய சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்றது தங்களுக்கு மனநிறைவை அளித்துள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியை அற்புதமாக ஏற்பாடு செய்து நடத்திய பிரம்ம குமாரிகள் அமைப்பினருக்கு நன்றி என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.