அல் அய்னில் தமிழ் படித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.. ஏராளமானோர் பங்கேற்பு!
அல் அய்னில் தமிழ் படித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அல் அய்ன் : தமிழ் படித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அல் அய்ன் இந்திய சமூக அமைப்பின் கீழ் அல் அய்ன் தமிழ் குடும்பம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் பள்ளிக்கூடத்தில் தமிழ் படிக்க வாய்ப்பில்லாத மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழியினை வார விடுமுறை நாளன்று கற்றுத்தரும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.
இந்த வகுப்பில் 40-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்துச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் முபாரக் முஸ்தபா தலைமை வகித்தார். ஜலீல் மற்றும் சலீம் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராஜ்வேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சென்னை எஸ்-ஐஏஎஸ் அகாடமி செயல் இயக்குநர் பேராசிரியர் சே.மு.மு. முகமதலி சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் தான் இருப்பது அல் அய்னிலா அல்லது தமிழகத்திலா என வியப்பு ஏற்படுகிறது என்றார். கடல் கடந்தாலும் தமிழ் மொழியின் மீது ஆர்வத்துடன் இளம் தலைமுறையினருக்கு கற்றுத்தரும் பாங்கு பாராட்டத்தக்கது என்றார். அதனைத் தொடர்ந்து படிப்பினை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்திய சமூல பல மைய தலைவர் சசி ஸ்டீபர்ன், முன்னாள் தலைவர் ஜிம்மி, சமூக சேவக சாஜிகான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முகமதலிக்கும், பத்திரிக்கையாளர் முதுவை ஹிதாயத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் அல் அய்ன் தமிழ் குடும்ப நிர்வாகிகள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்வி மற்றும் சமூகப் பணிகளில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஷார்ஜா அரசின் விருது பெற்ற ஆதித்ய சர்மா என்ற புதுச்சேரி மாணவர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அப்துல் காதிர் நன்றி கூறினார். அசாலி அகமது நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். லோகநாதன், மகேந்திரன், கோமதி நாயகம் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.