ஷார்ஜாவில் மாநாடு போல் நடந்த நகரத்தார் கூட்டமைப்பின் 150வது கலந்துரையாடல்
ஷார்ஜா: ஷார்ஜாவில் ஐக்கிய அரபு நாடுகளின் நகரத்தார் கூட்டமைப்பின் 150வது கலந்துரையாடல் கடந்த 8ம் தேதி அல் கத்ரி பண்ணை வீட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சங்கம் தோற்றுவித்து 22 ஆண்டுகள் நிறைவடைந்து சீராய் சிறப்பாய் ஆலமரம் போல வளர்ந்து தனது 150வது நிகழ்ச்சியை தமிழ் மாநாடு போன்று நிகழ்த்தி, படைப்புகளை மனதில் நீங்காதாய் படைத்தனர்.
விழாவை சிறப்பிக்க தாயகத்தில் இருந்து சிறப்பு தமிழ் அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர். செல்வி அபர்ணா ரமேஷ் இறை வணக்கம் பாடினார். அமுத மொழியில் குறளின் விளக்கத்தை செல்வன். ஆகாஷ் முத்து மாணிக்கம் குறளமுதமாய் விளக்கினார். இன்னிசை குயில்கள் செல்வி. அனுஸ்ரீ மற்றும் சுபஸ்ரீ சங்கபாடலை பாடினர். செல்வி.மெய்யமை வள்ளியப்பன் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

செயலாளர் முத்துராமன் கதிரேசன் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சிகளை தொகுப்பாளர் இராஜா கணேஷ் இராமநாதன் தொகுத்து வழங்கினார்.
தாயகத்தில் இருந்து வந்து சிறப்பித்த தமிழ் ஆர்வலர்கள் "கம்பன் அடிசூடி" பழ.பழனிப்பன், மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம், "விளையாட்டு வீரர்" முனைவர் இரா.நடராஜன், பேராசிரியர் முனைவர். பீ.மு.மன்சூர் மற்றும், குறள்சூடி உமையாள் ஆகியோர் சிறந்த தமிழில் உரையாற்றினார்கள். இலக்கியம், தமிழ்ச் சமுதாய முன்னேற்றம் மற்றும் தமிழ் வளர்ச்சி பற்றி சிறப்புச் செய்தார்கள்.

காசிவிஸ்வநாதன் தலைமையிலான புது நிர்வாக குழு உறுப்பினர்களை மற்றும் செயற்க்குழுவை சேதுவள்ளியப்பன் அறிமுகம் செய்தார்கள். "சிக்கனத்தில் சிறந்தவர்கள் ஆச்சிமார்களா? செட்டியார்களா? என்ற பட்டிமன்றம் "மனிதத்தேனீ" இரா.சொக்கலிங்கம் அவர்கள் நடுவராக இருந்து நடத்திக் கொடுத்தார்.
நன்றியுரையை தலைவர் ரமேஷ் இராமநாதன் வழங்கி, வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் சிறப்பித்த தமிழ் ஆர்வலர்களுக்கும் நினைவுப் பரிசும், குழந்தைகளுக்கு பொது அறிவு கணிதத் தேர்வு நடத்தி பரிசு வழங்கியும், அனைவருக்கும் தமிழ் பண்பாட்டின்படி சிறப்பு விருந்தோம்பலும் நடைபெற்று, உதவி செயலாளர் உடையப்பன் ராமநாதன் மற்றும் பொருளாளர் ஞானசம்பந்தன் மேற்பார்வையில் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.












Click it and Unblock the Notifications