இது ஜனநாயகத்தை Mute செய்யும் செயல் அல்லவா?
Recommended Video

சார்லட்: மெர்சல் ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகளுக்குள்தான் சுற்றிக் கொண்டிருந்தது. படத் தலைப்பு விவகாரம் முன்பு வெடித்தது. பின்னர் விலங்குகள் நல வாரியம் சான்றிதழ் தராமல் இழுத்தடித்தது. கடைசியாக முதல்வரைப் போய்ப் பார்த்து நடிகர் விஜய் பிரச்சினையை சரி செய்து ஓய்ந்த நிலையில், பாஜகவினர் கிளப்பிய பூகம்பம் வெடித்து நாடு முழுவதும் வியாபித்து விட்டது.
சர்ச்சை ஆட்டம் இன்னும் நின்றபாடில்லை. படம் வெளி வந்த பின் எழுந்த சர்ச்சை இதுக்கு முன்னாடி வந்ததெல்லாம் ஒண்ணுமே இல்லை என்ற அளவுக்கு எழும்பி நிற்கிறது இன்று. தேசிய அளவில் விஜய் படம் எழுப்பிய தாக்கம் இதுவே முதல் முறையாகும். விஜய் பட வசன பாணியில் சொல்வதானால் "இது அதுக்கும் மேல- வேற வேற லெவல்". அந்த அளவுக்கு சர்ச்சையின் காரம் ரொம்ப ஜாஸ்தி. சினிமாவில் அரசியல் பேசலாமா கூடாதா எந்த கேள்வியை இந்த சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பேச சாமானியனுக்கு அதிகாரம் உண்டு என்றால் சாமானியனின் பார்வைக்கு வரும் திரைப்படங்களுக்கும் அதே அதிகாரம் உண்டு. அந்த திரைப்படத்தை அந்த மக்களுக்கு கொண்டு வந்து தரும் இயக்குனரும் ஒரு சாதாரண மனிதன் என்ற நிலையில் அவர் கருத்தை வெளிக்கொண்டு வர அவருக்கும் உரிமை உண்டு. அந்த இயக்குனரின் கருத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலையை அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் செய்கின்றன. அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முன் சென்சார் போர்டு ஒரு ஃபில்டராக இருந்து சலித்து பின்னரே திரை அரங்கத்துக்கு வருகிறது. அப்படி திரை அரங்கத்திற்கு வந்து சேர்ந்த பின்னர் அதை பார்க்கும் கண்கள் அதை எப்படி வேண்டுமானாலும் உள்வாங்கி கொள்ளும் உரிமை அவர்கள் கண்களில் இருக்கிறது . அனால் அதை தாண்டி இங்கே இடையில் சம்பந்தமில்லாமல் சில்லறையை கொட்டினா வருகிற சத்தம் போல எழும் எதிர்ப்பு குரல்கள் என்ன சாதிக்க நினைக்கின்றன என்பதுதான் புரியவில்லை.

என்ன செய்வது நம்ம டிசைன்
சில குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும் (mute செய்யப்பட வேண்டும்) என எழுப்பப்பட்டுள்ள குரலின் சத்தம் அதிகமாக கேட்கிறது. இதுதான் ஜனநாயக நாடான இந்தியாவின் குரலா? நிச்சயம் அல்ல. மக்கள் எண்ணத்தை பேசும் உரிமையை நிராகரிக்கும், நசுக்க முயற்சிக்கும் சர்வாதிகார குரல் இது. GST பற்றிப் பேசி மத்திய அரசுக்கும் மிக்ஸி கிரைண்டர் பற்றி பேசி மாநில அரசுக்கும் இந்த படம் சரியான சவுக்கடியை கொடுத்துள்ளது. இதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது facebook - whatsapp பகிர்வுகளும் லைக்குகளும் மக்கள் எப்படி கொதித்துப் போயுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. மக்களின் எண்ணங்களை தான் படம் பிரதிபலித்துள்ளது என்பதை தானே இதைக் காட்டுகிறது. மக்களுக்கு பிடிச்சா அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காது போலயே. என்ன செய்வது நம்ம டிசைன் அப்படி!

மெர்சல் எழுப்பும் கேள்விகள்
இந்தப் படத்தில் சில கேள்விகளை கேட்கிறார்கள். GST வாங்கும் அரசால் மருத்துவ சேவையை இலவசமாக என் வழங்க முடியவில்லை? என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது . அரசு மறுத்தவமனையில் oxygen இல்லாமல் குழந்தைகள் இறந்த கொடூர சம்பவத்தை கோபத்தோடு கேட்டிருக்கிறார்கள். எலி கடித்து இருந்த பிஞ்சு குழந்தை, பவர் பேக்கப் இல்லாமல் உயிர்களை குடித்த மருத்துவமனை என்னும் சில மருத்துவ அக்கிரமங்கள் கேள்வி கேட்கப்பட்டிருக்கின்றன. உயிரை குடிக்கும் மதுபானத்துக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. ஆனா மக்கள் உயிரை காக்கிற மருந்துக்கு ஏன் 12% வரி என நியாயமாக கேட்டிருக்கிறார்கள். மக்கள் நோய்களை விட இந்த அரசாங்க ஆஸ்பத்திரிகளை பார்த்து தான் அதிகமாக பயப்படுகிறார்கள். அந்த பயம் தான் தனியார் மருத்துவமனைகளின் இன்வெஸ்டேட்மென்ட் என்ற ஆழமான உண்மையை அடித்து சொல்லி இருக்கிறது. இதை எல்லாம் நீக்க சொல்கிறார்கள். ஆனால் அதை மக்கள் மத்தியில் படு வேகமாக கொண்டு போய் விட்டனர் சமூக ஊடகங்கள் மூலம் விஜய் ரசிகர்கள்.

மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் படம்
பிரதமர் முதல் அனைத்து அரசு துறையினரும் அரசு ஊழியரும் அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். எல்லோருக்கும் இலவச மருத்துவம் வழங்க வேண்டும் என்று எடுத்து சொல்லி இருக்கிறது. ஆஸ்பத்திரிக்கு போனால் செக் அப் என்ற பெயரில் மக்களின் பர்ஸை காலி செய்து அனுப்பும் சில பேராசை பிடித்த மருத்துவர்களின் முகத்தை பற்றியும் அப்பாவி மக்களையும் பற்றி பேசி இருக்கிறது இந்த படம். இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லையே பாஸ். ஒரு காதல், 5 பாடல் ஒரு மொக்கை கதை என்று பல படங்களும் அல்லது ஒரு கதையோடு கொஞ்சம் கருத்தும் காதலும் என சில படங்களும் வரும் இக்காலத்தில், எப்போதாவது வருகிறது இது போன்ற சமூக சிந்தனை பேசும் படங்களும். இத்தகைய படங்களை கட்டாயம் மக்கள் மனதார வரவேற்கவே செய்வார்கள். தங்கள் மனதில் இருப்பதை திரையில் கதாநாயகன் பேசும் போது திரை அரங்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ரசிகனின் இதயமும் கையும் மகிழ்ச்சியில் சத்தமாக ஒலி எழுப்புவது எதார்த்தம் தானே.

இலவச விளம்பரம்
பாரதிய ஜனதா எதிர்ப்பு குரல் எழுப்புகிறேன் என்ற பேரில் தங்களையும் அறியாமல் படத்துக்கு துளி கூட காசு வாங்காமல் பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தி தந்து இருக்கிறது. படம் பார்க்க போக வேண்டும் என நினைக்காதவர்களும் கூட, படத்தை சாவகாசமாக இன்னும் இரண்டு வாரம் கழிச்சு போய் பார்க்கலாம் என நினைத்தவர்களை கூட இவர்கள் எழுப்பிய சர்ச்சையில் ஆஹா படத்துல என்னவோ இருக்கே என்று தியேட்டரை நோக்கி ஓட வைத்திருக்கிறது. அதனால் சர்ச்சைகள் எழுப்பிய சாம்ராஜ்யத்தில் மெர்சல் இன்னும் ஸ்டிராங்காகி விட்டதுதான் உண்மை.
- Inkpena சஹாயா












Click it and Unblock the Notifications