திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்
திருப்பாவை - 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்!
விளக்கம்:
பாவை நோன்பு நோற்பவர்களுக்கு இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் சில கோட்பாடுகளை விதிக்கிறாள். நோன்பில் ஈடுப்பட்டவர்கள் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களையும், தவிர்க்க வேண்டிய ஆறு விஷயங்களையும் தெரிவிக்கிறாள்.
கண்ணன் பிறந்த இந்த பூமியில் பிறந்து வாழ்பவர்களே, திருப்பாற்க்கடலில் துயிலும் அந்த பகவானின் நாம சங்கீர்த்தனங்களை அன்புடன் பாடி, நெய் உண்ணாது, பால் பருகாது, அதிகாலையில் நீராடி, கண்களுக்கு மை இடாமல், மலர்களை நாம் சூடாமல், செய்யக்கூடாதவற்றைச்செய்யாமல், பொய் பேசாது, அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாது பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் தம்மால் இயன்ற அளவு வழங்கி, நாம் உய்யும் வகையை நாடி, மகிழ்ந்து, நாம் நோன்பு நோற்கவேண்டும் என்கிறார் ஆண்டாள் நாட்சியார்.

திருவெம்பாவை - 2
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
சிறந்த அணிகலன்களை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது, என் பாசமெல்லாம் எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமையாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? என்று பெண்கள் வெளியில் இருந்து கேட்கின்றனர். அதற்கு அவளோ.... பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என்னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? இது இறைவனை பாட வேண்டிய நேரம் என்று கூறுகிறாள். தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?












Click it and Unblock the Notifications