பஹ்ரைனில் களைகட்டிய பொங்கல் விழா.. ஆடல் பாடல் விளையாட்டுகளுடன் கோலாகல கொண்டாட்டம்!
பஹ்ரைனில் களைகட்டிய பொங்கல் விழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
மனாமா: பஹ்ரைனில் களைகட்டிய பொங்கல் விழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பஹ்ரைனில் பொங்கல் திருவிழா கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக மல்கியா எனும் கிராமத்தினில் அமைந்த மாபெரும் தோட்டத்தினில் மிக சிறப்பாக டாஸ்கா தமிழ் மன்றத்தினரால் கொண்டாடப்பட்டது.
கிட்டத்தட்ட குடும்பத்தினர் குழந்தைகள் என்று முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு அன்றைய நாள் முழுவதும் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வண்ணம் அமைந்தது.
கொண்டாடி மகிழ்ந்த குடும்பங்கள்
காலையில் சூடான மெதுவடையுடன் ஆவி பறக்கும் காபியுடன் துவங்கிய இந்த நிகழ்வு, வயது வாரியாக குழந்தைகளுக்கான விளையாட்டுகள் , மகளிருக்கான விளையாட்டுகள், தம்பதியருக்கான விளையாட்டுகள் என்று ஒருபக்கம் களைகட்டியது. வருகை புரிந்தோரில் ஒரு கூட்டம் நீச்சல் குளத்தினில் மீன்களாக துள்ளிப்பாய்ந்து கொண்டிருக்க, மற்றொரு குழு தோட்டத்தினில் அமைந்திருந்த மிருக காட்சி சாலையினை காண சென்றது. மற்றொரு கூட்டம் அங்கே அமைந்திருந்த வயல்வெளிகளை ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
இளைஞர்களோ கபடி போட்டி, கயிறு இழுக்கும் போட்டி , உறியடிக்கும் போட்டிகள் என்று தங்களின் திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டுகளில் வெற்றி பெற்றோருக்கு தங்க காசு , பணப்பரிசு, கண்கவரும் பரிசுப்பொதி, என்று ஏராளமாக வழங்கப்பட்டது.
பொங்கலோ பொங்கல்
தமிழ் மன்றத்தின் மகளிரணியினர் குழு வண்ணக் கோலமிட்டு கரும்பு பந்தலிலே அமைக்கப்பட்ட அடுப்பினில் மண் பாண்டம் வைத்து சுவையான பசுநெய்யும் அச்சுவெல்லம் சர்க்கரை, புத்தம்புது பச்சரிசி, பசும்பாலுடன் முந்திரி ஏலம் திராட்சை மணக்க அருமையான சர்க்கரை பொங்கலை மகிழ்வுடன் சமைக்க பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் எனும் மங்கள ஒலியில் தோட்டம் அதிர்ந்தது.
பூஜைக்காக அனைவரும் மையப்பகுதியில் ஒருங்கிணைய, பொங்கிய சர்க்கரை பொங்கல் நுனி வாழை இலையில் ஏராளமான பழங்கள், வாழைப்பழம், தேங்காய் உடன் சூரியனுக்கு படைக்கப்பட்டு கற்பூர ஆரத்தியுடன் பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கும்மி கொட்டி குலவை கொட்டி
பூஜை முடிந்ததும் மகளிரணியினர் அனைவரும் ஒன்று கூடி வட்டமாக கும்மி கொட்டி குலவை கொட்டி பொங்கல் பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடினர். கைதட்டி ரசித்து மகிழ்ந்த ஆடவர்களும் ஆடவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட ஆடவர்களும் மிக சிறப்பாக தங்களுக்கே உரித்தான பாணியில் ஆட அந்த இடம் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றது.
அறுசுவை உணவுடன்..
அனைவருமே ஏதோ ஒரு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற எண்ணம் மறந்து சொந்த ஊரில் இருப்பது போன்ற உற்சாக வெள்ளத்தில் உளமார நீந்தி திளைத்தனர். மதியம் அறுசுவை உணவு அப்பளம் வடை பாயசம் சர்க்கரை பொங்கல், கரும்பு, வாழைப்பழம் உள்ளிட்ட திருமணத்தில் உள்ளது போன்ற சுவையான உணவு நுனி வாழை இலையில் பரிமாறப்பட்டது. உணவிற்கு பிறகும் விளையாட்டுகள் தொடர்ந்தது.
மறக்க இயலாத ஒன்று
ஒருபுறம் தம்போலா விளையாட்டுகள் களை கட்ட மாலையில் அனைவரும் பிரிய மனமின்றி உற்சாக மனதுடன் அவரவர் இல்லம் நோக்கி சென்றனர். மொத்தத்தில் அன்றைய பொங்கல் கொண்டாட்டம் வாழ்விலே மறக்க இயலாத ஒன்றாக அனைவருக்கும் அமைந்தது என்றால் அது மிகையன்று...தமிழ் மன்றத்தின் தலைவர் அருணாச்சலம் அவர்களின் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர்.