மார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை - 24
அன்று இவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையாய் எடுத்தாய்! குணம்போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றேன்று உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
விளக்கம்: அன்று மகாபலி மன்னனிடம் தானம் வாங்கியபோது இரண்டு அடிகளால் உலகளந்த பெருமானே, உன்னுடைய திருவடிகளைப் போற்றுகிறோம். சீதையை மீட்பதற்காக தெற்கே கடல் கடந்து சென்று இலங்கையை அழித்த பெருமானே, உன் வீரத்தைப் போற்றுகிறோம். கன்றின உருவில் வந்த அசுரனையும், பழ உருவில் வந்த அசுரனையும் அழித்த உன் திருவடிகளை வணங்குகிறோம்.
கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோபாலர்களையும் பசுக் குலங்களையும் கட்டிக் காத்தவனே! உன் குணம் பல்லாண்டு வாழ்க. பகையை வென்று ஒழிக்கும் உன் கையில் உள்ள வேல் பல்லாண்டு வாழ்க; -என்றெல்லாம் பலவாறாகச் சொல்லி, உன் வீரத்தைப் பறை சாற்றும் சரிதங்களைப் புகழ்ந்து கொண்டு, இன்று வந்திருக்கிறோம். பறை கொள்வதற்காக வந்திருக்கிறோம். இறங்கி அருள் புரி கண்ணா!
திருப்பள்ளியெழுச்சி - 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
விளக்கம் : திருப்பெருந்துறையில் இறையடியார்கள் கூடி சிவபெருமானை போற்றிப் பாடுகிறார்கள். ஒருபக்கம் வீணை இசை, ஒரு பக்கம் யாழ் இசை, இன்னொரு பக்கம் வேத கீதம் இசைக்கிறார்கள். நறுமலர்ப் பூக்களை கைகளில் ஏந்தி நிற்கிறார்கள். இன்னொரு பக்கமோ மனம் உருக இறைவனின் புகழ் பாடி நிற்கிறார்கள். பெருமானின் புகழ் பாடுவதால் கிடைக்கும் பேரின்பத்தால் உடல் துவண்டு காணப்படுகிறார்கள். தலைக்கு மேல் கை தூக்கி கூப்பி, சிவ சிவா என்று கூறி தொழுகிறார்கள். அப்படிப்பட்ட பெருமானே, என்னையும் நீ ஆட் கொண்டு அருள் புரிவாயாக, பள்ளி எழுவாயாக.