மார்கழி பூஜை : திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி- 22
திருப்பாவை - 22
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம் :
அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம்.
கி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.
திருப்பள்ளி எழுச்சி - 2
அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.
விளக்கம்: சூரியன் கிழக்குத் திசையை நெருங்கிவிட்டான். இருளோ ஓடி அகன்றுவிட்டது. உதயம் ஆனது. வெளிச்சத்தைப் பார்த்து தாமரை மலர்கள் பூத்தன. பூக்கள் மலர்ந்ததைப் பார்த்து வண்டுக் கூட்டங்கள் ரீங்காரமிட்டு இசை பாடத் தொடங்கின.
அதேபோல உன் முகமலரில் கருணையாம் சூரியன் எழுகின்றது. அண்ணலே! உன் கண்களாம் எழில் மலர்கள் விரிகின்றன. அவை விரியும்போதே அடியவர்களாம் வண்டுகள் சூழ்ந்து ரீங்காரமிடுகின்றன. இவற்றை நீ அறிந்துகொள்.
'அருள்நிதியை அள்ளி வழங்கவரும் ஆனந்தமாகிய மலையே, அலைகடலே! திருப்பெருந்துறையில் உறைந்துள்ள அழகிய பெருமானே, அருள் செல்வத்தை வாரி வழங்கும் ஆனந்த மலையே, பள்ளி எழுந்தருளாய்.












Click it and Unblock the Notifications