திருமணம்-லண்டன் ந.ஹேமராஜ்
இன்றும் நீ எனக்கு
ஒரு குழந்தைதான்!
உன் ஆறு வருடத் தாம்பத்யம்
ஆறு வருடக் கொடுமைச் சிறையா?
இரவு பகல்
நிம்மதியற்று
நெருஞ்சி முள்
பாதையிலா நடந்து கொண்டிருந்தாய்?
உனது
அந்த அழகான மீனாட்சி-சுந்தரேஸ்வரர்
தோற்றத்தை
எத்தனை தடவை
நான் எடுத்தெடுத்து
ரசித்திருப்பேன்!
ஓசையின்றி-இரைச்சலின்றி
ஏன் புயலடித்தது?
இடி, மின்னல், பூகம்பத்தை
தனியனாய் நின்று
ஏன் தாங்கிக் கொண்டாய்?
உன் மண நாளிலிருந்தே
நிம்மதி மறந்துதான் வாழ்ந்தாயாம்
என் ஈரற்குலை துடித்தது அறிவாயா?
பெயரளவில் மட்டும் கணவனாம்
உங்களை
உறவினரும், நண்பர்களும்
எத்துணை சிறப்புற வாழ்த்தினோம்!
சீருமில்லை, சீதனமுமில்லை
இல்லறம் இனிக்க
அறிவு மட்டும் போதும்!
அதுவே அழகு என்றாயே!
உன் இளமை நாட்களிலும்
முதிர்ந்த வாலிபத்திலும்
கற்பனை மண மேடையில்
கொலு வைத்திருந்த
உன் லட்சியத் துணைக்கு
ஏக விரதம் பூண்டாயே!
உன் இல்லறத்தில்
நீ விரும்பியவை
கிடைக்காமல் போனதேன்?
இன்றும் நீங்களே
அழகான தம்பதிகள்!
-லண்டன் ந.ஹேமராஜ்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.