நிகழாமல்..
உன்னில் விழுந்த அந்த
முதல்கணம் என்னில்
நிகழாமல் போயிருக்கலாம்.
உன் உதடுகளால் நான்
அழைக்கப்படாமலிருந்தால்
எண்ணூறு தூக்கமற்ற இரவுகள்
ஏக்கத்திலேயே தொலைந்த என்
நொடிகள் எல்லாம்
படைப்பாக மாறியிருக்கலாம்.
ஆலயம் ஆலயமாக ஏறியிறங்கிய
என் பிரார்த்தனையில்
ஒருமுறையேனும் உன் பெயர் விடுத்து
என்பெயர் உச்சரிக்கப்பட்டிருந்தால்
என்இருப்பின் பொருட்டு நீயில்லையென்று
எல்லாம் வல்லவன் என்னிடம் சொல்லியிருக்கலாம்.
என் தொலைபேசி அழைப்பு
உன்னால் புறக்கணிக்கபடாமலிருந்தால்
உன் நினைவு சூன்யத்தில்
சுழன்றுவரும் என் பகல்பொழுது
பசித்து பிச்சையெடுக்கும்
கூன் விழுந்த கிழவனின் கேவலுக்கு
காதுகொடுத்திருக்கலாம்.
செவிடனாக நான் நிந்திக்கப்பட்டிருந்தால்
உன்குரலொலித்த நொடியில்
என்னிடமிருந்து பிரிந்து
ஏதோவொன்று உன்னிடம்
உறையும் ஒவ்வொரு முறையும்
செயலிழந்து சிந்தனை தொலைத்து
செத்துப்போகமாலிருந்திருக்கலாம்
உன்னில் விழுந்த அந்த
முதல்கணம் என்னில்
நிகழாமலேயே போயிருந்திருக்கலாம்.
- பாஷா([email protected])