இயற்கையொன்றி இருத்தல்!
விரிந்திருக்கும் வெளியில் விரையுமிந்தக்
கோளின் வனப்பும், கதியும்,
உயிரின் இருப்பும், அதற்கான சாத்தியமும்,
விந்தைக்குரியவை, அற்புதமானவை என்று
வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம்
சில வேளைகளில் விருட்சங்களின்
இயல்பும் வாழ்வும் என் சிந்தையில்
பொறியேற்படுத்துவதுண்டு
அப்பொழுதெல்லாம் அவற்றின் வாழ்க்கை
பற்றி சிறிது ஆழமாகச் சிந்திப்பேன்
ஒளியும் வளியும் விருட்சத்தின்
இருப்பு எம்முடையதைப் போல
ஆயின் ஒன்றின் கழிவில் அடுத்ததன்
உயிர்ப்பு.
விருட்சத் தோழரைப் போல்
நாம் உணவைத் தயாரித்தல் சாத்தியமா
என்று அப்பொழுதெல்லாம்
சிந்திப்பேன்
அதற்குரிய ஆற்றல் எம்முள் உண்டா
என்று அப்பொழுது நான்
ஆழமாக யோசிப்பேன்.
இருதயத் துடிப்படக்கி
இருத்தல் இலகுவானதா
என்றெல்லாம் சிந்தனைகள்
இறக்கை விரிக்கும் சமயங்களவ
மாரித் தூக்கத்தின் சாத்தியம்
மிருகங்களுக்கு மட்டுமா
சாத்தியம்? என்று அப்பொழுது
எண்ணுவேன்.
அவை மட்டும் சாத்தியமானால்
ஆம் அதற்குரிய சாத்தியங்கள்
நிறைவேறியுள்ளனதான்
இருப்பிற்காகக் கொல்லுதல் தவிர்த்து,
இருப்புக்காக விருட்சமழித்து,
இயற்கையொன்றி இருந்திடுமொரு
இருப்பில்
எத்துணை வனப்பு! எத்துணை களிப்பு!
- வ.ந.கிரிதரன்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications