சாவும் ஒரு வாழ்வே!
Subscribe to Oneindia Tamil
ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணைக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!
குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! எமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?
முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்! என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று...
சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காச்
செத்தே மடிகின்றேன்! எனச்
செல்வாய் தமிழ் ஏறே!
தங்கை சிறுதம்பி ஒரு
தந்தை வயதன்னை
மங்கை இள மனையாள் புது
மழலை முதலானோர்
என்கை தனிலுண்டே எனும்
ஏக்கம் விடு தோழா!
சங்கை பெறப் போவார்பெறும்
சாவும் ஒரு வாழ்வே!
- காசி ஆனந்தன்












Click it and Unblock the Notifications