திருக்குறள்- தொ. சூசைமிக்கேல்
திருக்குறள்!
அது, தெய்வப் புலவனின் திருக்குரல்!
பொய்யாது பெய்யும் தமிழ் முகில்!
புதுப்புது அர்த்தங்களைப்
புலப்படுத்திய வண்ணமிருக்கும் புனிதப் புதையல்!
தமிழ்த்தாயின் மணிவயிற்றுதித்த
தலைச்சன் பிள்ளையின் தத்துவக் கருவூலம்!
தமிழனை என்றென்றும் இறுமாந்திட வைத்திருக்கும்
பெருமானார் யாத்துவைத்த இலக்கியக் குற்றாலம்!!
தமிழனை மனிதனுக்கும்
மனிதனைத் தமிழனுக்கும்
முதன்முதல் அறிமுகம் செய்துவைத்த ஆசானின்
முப்பால் மணம்கமழும் முத்திரை வேதம்!
பிறப்பால் யாவரும் ஓரினம் என்பதைப்
பிறர்பால் விளக்கிடத் தமிழனுக்குக் கிடைத்திருக்கும்
பிழையிலாப் பேரிகை முழக்கம்!
தீண்டாமையின் வேண்டாமையைச் செயல்முறைப் படுத்திடத்
திட்டம் வகுத்துச் செதுக்கப்பட்டதோர் செந்தமிழ் ஈட்டி!
நற்றமிழ் இனத்தின் நலஞ்சார் வாழ்க்கைநெறியை
ஞாலத்தின் ஏனைய இனங்கட்கெல்லாம்
ஞாபகமூட்டி வருகின்ற நாட்காட்டி!
சிலர்மட்டும் செவ்வி தலைப்படும் காமமது
பலர்மாட்டும் சென்றடையப் பரிமாற்றம் புரிகின்ற பரிபாஷை!
களவியலையும் கற்பியலையும் கலந்து தந்து,
உளவியலோடு உயிரியலை உறவியல் படுத்திய
ஒப்பிலாப் புலவனின் தப்பிலாச் செப்பலோசை!
எனவே,
ஓங்குபுகழ் வள்ளுவனின் உரைசான்ற மறைவாக்கு,
ஒவ்வொரு தமிழனும் பேணவேண்டிய பொக்கிசம்!
ஒவ்வொரு தமிழனும் பூணவேண்டிய பொற்கவசம்!
ஒவ்வொரு தமிழ்வீட்டிலும் காணவேண்டிய கலைக் களஞ்சியம்!!
- தொ. சூசைமிக்கேல்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications