என் மழை தட்டுகையில்
என்னை மழையில்
நனைய விட்டு
மறைந்து போன
மின்னல் அவள்!
வானவில்லாய்
வளைந்து சிரித்து
நான் வண்ணங்கள்
உணரும்முன்
குருடாக்கிப் போன
ஒளிப்பிறை அவள்!
விரித்த குடையில்
மோதும் நீர்க்குச்சிகள்
பரிகசிக்கும்
என் தோல்வியை!
ஈரக்காலணிகளுள்
பிசுபிசுக்கும்
மழை நீர்
இரங்கலிடும்
என் இயலாமையை!
அன்று போல்
மழையை ரசிக்கும்
மனம்
இன்று இல்லை!
உன்னிடத்தில்
பெய்யும் மழை
இந்த முறையும்
என்னைப் பற்றி
ஏதேனும் சொல்ல
வருகையில்
வழக்கம்போல்
சாரலைத் துரத்தி
ஜன்னலைச் சாத்தாதே!
என் மழை
தட்டுகையில்
உன் கதவுகளைப்
பூட்டாதே!
வாசலில் நின்று
ச்சோவெனக் கதறும்
இன்றைய
மழையாவது
உன் ஆலங்கட்டி
மனதைக் கரைத்து
இங்கே என்
இதயக் கூரையில்
கொட்டாதா?
வானம் பார்த்த
காதலில் நீ
வந்தால் மழை
இல்லையெனில்
காதல் என்றும்
பிழை!
([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.