தந்தை மகனுக்காற்றும் ...!
அப்பா எப்படி இருக்கிறீர்கள்?
கூட்டுப் புழுவை ரசித்தபடி
ஆரம்பித்த நம் சினேகம்
மீட்டர் பெட்டியில் கட்டி
குருவிக் கூட்டை கலைத்ததில்
முடிந்து போனது - பின் நாம்
அப்பா பிள்ளைகளானோம் ..
அப்பா ஞாபகமிருக்கிறதா?
நடுங்கும் பயத்தோடு
தவளை திண்ணும் பாம்பை
அருகிருந்து படம் பிடித்தோமே
அந்த அசாத்திய தைரியம் இப்போது
எனக்கு கொஞ்சம் விட்டுத்தான் போயிற்று
நீங்களில்லாது ...
அலையடித்த ஈரம் காய்வதற்குள்
கவிதை சொல்லும போட்டி வைத்துக் கொள்வோமே
அதில்தான் நான் கவிதைச் சூத்திரம் கற்றேன் ...
இப்போது கவிதை சொல்லிகளிடம்
போட்டியிட அதுதான் உதவுகிறது.
உங்களுக்கு உடன்பாடில்லா
என் கவிதைகளைத்தான்
நான் இப்போது விற்றுக் கொண்டிருக்கிறேன்
உடைந்த பலூன் வைத்து விளையாட முயலும்
பலூன்காரனின் குழந்தைகள் போல ...
அம்மாவின் பட்டுப் புடவையில்
நீங்கள் வண்ணம் ரசித்தபோது
நான் அதில் நெளியும்
செத்த புழுக்களின்
நைந்த உடல் கண்டேன் -
அப்போதுதான் நீங்களும் நானும்
வேறுபட ஆரம்பித்தோம்
கவிதைகளாலும் ...
அப்பா காலம் எவ்வளவு வேடிக்கையானது
பிரிவே இல்லாத உறவுகளே இல்லையா?
ஞாபகமிருக்கிறதா நம்
மொட்டை மாடி இரவுகளும்
சம்பாதணைகளும் ..?
உங்களுக்குப் பிடிக்காத என்
கவிதைகளைப் போலத்தான்
உங்களுக்கு அவளையும் பிடிக்கவில்லை
அவள் அவளுக்குப் பிடித்தவர்களையல்லவா
விட்டு விட்டு வந்திருக்கிறாள்?
நீங்கள் சொல்வீர்களே,
எப்போதும் ஆசானாய் இருக்க முயலும்
உறவுகள் வெறுக்கத்தக்கவை - நீயே
உனக்கு ஆசானாயிரு என்று
அதில் எனக்கு சம்மதம்
ஆனால் உங்களுக்கு? ...
அப்பா நான் என் குழந்தைக்கு
இப்போது மொட்டை மாடி
இரவுகளில் நகரும் நட்சத்திரங்களையும்
தேயும் நிலவையும் ரசிக்கச் சொல்லித் தருகிறேன் ...
அப்பா என்னோடு வந்து விடுங்கள்
காலம் இன்னமும்
ரசிக்க முடிந்ததாய் தானிருக்கிறது
என் வீடு மீட்டர் பெட்டிகளில்லாதது
ஆனால் இங்கே நிறைய மரங்களும்
பூக்களும் பறவைகளுண்டு
அப்பா எனக்கு நிறைய
நம்பிக்கையிருக்கிறது
நீங்கள் வருவீர்கள் என்று ..
ஏனெனில்,
இன்னம் நீங்கள்
தூரலில் நனையும்
வானவில்லையும்
இரவில் நகரும்
நட்சத்திரங்களையும்
ரசித்திருக்கிறீர்களாமே ...












Click it and Unblock the Notifications