காதல் குற்றவாளி
காலமும் உன் சேவகன் என்று
நான் சொன்னதை நினைத்து
என்னை மண்டியிட வைக்க முயலாதே!
என் அன்றைய
கவிதையின் கங்கோத்திரியே!
மனங்களின் வக்கிரங்களுக்கு
நாம் மரண தண்டனை வழங்கினோமே!
நீ மட்டும் ஏன் தன்னிச்சையாக
உன்னவற்றுக்கு ஆயுள் தண்டனையாக்கி
நீ அவற்றிடம் ஆயுள் கைதியானாய்?
உன் சிறைக் கம்பிகளின் நெருக்கம்
காற்றுக்குப் போகக் கஷ்டம் தரலாம்.
என்னை எப்படி அடக்கிவிடும்?
உன் பூட்டுக்களுக்குச் சாவி செய்து
உன் உள்ளறைகளை உனக்கு
ஒழுங்கு செய்யச் சொல்லித் தந்த என்னை
உன் பிரிய வஸ்துவாக மாற்ற முயலாதே!
பகுபத உறுப்பிலக்கணமும்-
சந்தியும், புணர்ச்சி விகாரங்களும்
அறிந்து கொண்டவன் நான்.
என்னை உன் சாரியை ஆக்க முயலாதே!
என் உடலைப் போகத்துக்குத்
தடுப்புச் சுவராக்கிக் கொண்டு,
உன் உடலைச் சிறைச் சாலையின்
சுவரென்று உணர்ந்துவிட்டவன் நான்.
இலவச நுழைவுச் சீட்டாய்
வீசும் உன் புன்னகைகள் என்னைப்
பொன் விலங்கிட்டு,
வெள்ளிக் கூண்டிலிட்டு,
வைரம் பதித்த சாட்டையாலடிக்கத்தானே
துரத்தித் துரத்தி அழைக்கிறாய்?
என் வார்த்தைகளுக்கு வியாக்கியானங்கள்
எழுதி என் மீது வீசாமல்
உனக்குள் எட்டிப் பார்த்து
நான் சொல்வதை யோசி!
என்னை நானாகப் பாரேன்!
புரிகிறதா? முடிகிறதா? வா!
- திருத்தக்கன்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications