முத்தாசென் கண்ணா கவிதைகள்
பேருந்தில்...
"அனைவருக்கும் கல்வி இயக்கம்"
போர்டுக்கு கீழே
"சார் இஞ்சி மொரப்பா"
-சிறுவனின் குரல்
தொழில்நுட்பம்...
"செம்பருத்தியா வக்கிறது?
சிவனுக்கு ஆகாதே"-என்ற
கோயில் கிழவியிடம்
எப்படி சொல்லி புரிய வைப்பது
இன்று பிரதோஷத்திற்காக
பரமசிவனுக்குப்
பாக்கெட் பாலில்தான்
அபிஷேகம் நடத்தினோம் என்று
கிழிந்த நோட்டு..
இடது வலமாக மடித்தேன்
குறுக்கு நெடுக்குமாக மடித்தேன்
ஓரங்களை மடித்து
நடுவில் விரல் வைத்துப் பார்த்தேன்
எப்படி மறைத்தாலும்
மறைவதாய் இல்லை
பத்து ரூபாய் நோட்டின் கிழிசல்
நேராக மடித்து நிமிர்த்து நீட்டினேன்
கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல்
சீட்டைக் கி்ழித்தார் நடத்துனர்
எப்படியோ ஏமாற்றிவிட்டேன் என்று
கர்வப்பட எத்தனிக்கையில்
சில்லரையாக வந்து சேர்ந்தது
அதைவிடக் கிழிசலான
ஐந்து ரூபாய் நோட்டு...............
எல்லா இடத்திலும் ஒரு கவிதை
கொய்யாக்காய் விற்பவளின் கூச்சல்
பாட்டுப்பாடி பிழைப்பவர்கள்
இரயில் பெட்டிக்கே உரிய அருவருப்பு நிறம்
என் கழுத்தை இறுக்கும் டை
அலுவலக நேர நெரிசல்
புதிய தமிழ் பாடல்களை சிணுங்கும் செல்போன்கள்
பக்கத்தில் நிற்பவனின் இரண்டு நாள் வியர்வைச் சட்டை
இத்தனை நெரிசலிலும் ஆசுவசப்படத்துகிறது
அம்மாவின் முடியை இழுத்து
அழகாய்ச் சிரிக்கும் ஆறுமாதக் குழந்தை.........
- முத்தாசென் கண்ணா (mailto:[email protected])












Click it and Unblock the Notifications