அந்தப்புறமும் கேள்விகளும்
அறிவும் ஆவலுமுள்ள
அழகான ஐம்பது பேர் ஒதுக்கி
அதிலும் ஒன்றைத் தொட்டு
ஆரம்பித்தேன் கேள்விகளை...
கேட்கப்படாத கேள்விகள்
உனக்கு விருப்பமில்லாது கூட போகலாம்
ஆயினும் எனை
உன் சகோதரனாய் நினைத்து...
முட்டாளே,
வரக்கூடாத இடம்
சொல்லக்கூடாத உறவு...
கேள்விகளை கேள்
நேரமெனக்கு முக்கியம்...
பெயர் என்ன?
எனக்குப்பிடித்தது
உனக்குப்பிடிப்பதில்லை
பெயரிலென்ன?
யாரும் கேட்காத கேள்விதான்
''கண்ணகி''
ஆச்சர்யம் பெயருக்கும்
தொழிலுக்கும் சம்பந்தமில்லைதான்...
ஊர் எது?
வானம் முடியுமிடம்
பூமி அற்ற இடம்
இது தவிர எல்லாமே
என் ஊர்..
முதலிரவு பற்றி...?
ஞாபகமில்லை
ஆயிரம் இரவுகள்
ஒவ்வொன்றும் முதலிரவு...
பெண் சுதந்திரம்?
காந்தி கண்டது
வெறும் கனவு...
பகலென்பது....?
இன்னொரு
இரவின் தொடக்கம்...
தொழிலுக்கு வந்தது?
ஆண்கள் யாருமில்லை
ஆணாய் யாரும் பிறந்ததில்லை..
பாட்டி தொட்டு எல்லாமே
எனைப்போல...
அப்பா பெயர்?
அது என் தாயின்
ஓர் நாள் உறவு...
இங்கு வருவதில்
யாரேனும் ஒருவராய் இருக்கலாம்...
பார்க்க நினைப்பது..?
அருந்ததியை...
எதுவாய் பிறக்க ஆசை?
"கண்ணகியாய்"
எய்ட்ஸ் பற்றி...
உலக பொது மொழி..
பிடித்த விஷயம்...?
இன்றைக்கு பிடிப்பது
நாளை பிடித்ததாய் இருப்பதில்லை...
சரி வருகிறேன்...
கேள்விகளுடனா?
ஆசைகளுடனா?
-ரிஷி சேது ([email protected])
Read Other Articles By The Same Author












Click it and Unblock the Notifications