தமிழ்! தமிழ்! தமிழ்!
Subscribe to Oneindia Tamil
துள்ளி நான் புவியில்
துளிர்த்த நாள் முதலாய்
எழுந்த மோகமிது
பள்ளி படித்த வேளையிலும்
தமிழ் நினைத்து வேகும்
மொழியின் தாகமிது
தள்ளி வைத்து போகும்படி
தனிவிதி சொன்ன போதும்
தாளாது வளர்ந்த பாசமிது
எள்ளிப் பகைவர் நகைத்தாலும்
என்றும் தணியாத தாகமிது
எந்தன் மொழிமீது கொண்ட மோகமது
முள்ளில் கட்டியெனை வதைத்தாலும்
முற்றத்தில் பணத்தை யிறைத்தாலும்
முடியாது யாராலும் மூடிவிட இத்தீயை
கிள்ளி பார்க்கும் உணர்வல்ல
உதிரத்தில் உறைந்த நிறமிது
உயிரோடு கலந்த தமிழிது
கள்ளி யவள் மீது கொண்ட காதல்
சொல்லிக் கவிபாடும் போதும்
நல்ல தமிழ் வந்து மோதும்
புள்ளி போல நான் மறைந்து
தொலைதூரம் போனாலும்
தமிழ் மெல்லினக் குற்றாவேன்
சொல்லி நான் முடிக்கும் வேளை
தமிழ் அன்னை அடிபணிந்து
தமிழ் தமிழ் தமிழெனச் சுவாசிப்பேன்
-சக்தி சக்திதாசன் [email protected]












Click it and Unblock the Notifications