"AI ஆபத்துகளை நினைத்தால் இரவில் தூக்கமே வருவதில்லை.." நேரடியாக எச்சரித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
சியாட்டில்: இப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் வரும் காலங்களில் நமக்கு மிகப் பெரியளவில் பலனைக் கொடுக்கும் என சுந்தர் பிச்சை கூறியிருக்கிறார். அதேநேரம் ஏஐ காரணமாக வரும் காலத்தில் மிகப் பெரிய பிரச்சனையும் வர வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ள சுந்தர் பிச்சை அதை நினைத்தாலே தூக்கம் வருவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இந்தக் காலத்தில் ஏஐ துறையில் கடும் போட்டி நடந்து வருகிறது. ஏஐ மார்கெட்டை பிடிக்கப் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வருகிறார்கள். குறிப்பாகக் கூகுளின் ஜெமினி, பெர்பிளக்ஸிட்டி, க்ரோக், சாட்ஜிபிடி ஆகியவை உள்ளன. இவை இந்தியா மார்கெட்டை பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் ப்ரீமியம் சந்தா கூட இலவசமாகக் கொடுக்கிறார்கள்.

ஏஐ
இந்த ஏஐ காரணமாக வரும் காலத்தில் நமக்கு மிகப் பெரிய நன்மைகள் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதேநேரம் இதனால் மிக பெரிய ஆபத்துகளும் கூட ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக வேலையிழப்பு, பிரைவசி சார்ந்த பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் ஏஐ ஆய்வுகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கூட குரல்கள் எழுந்துள்ளன.
சுந்தர் பிச்சை
இதற்கிடையே ஏஐ தொடர்பாகக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். AIஇல் இருக்கும் முக்கிய பிரச்சினை என்ன என்பது குறித்து விளக்கிய சுந்தர் பிச்சை, இதனால் இரவு முழுக்க தன்னால் தூங்கவே முடியவில்லை என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். அதாவது ஏஐ காரணமாக நமக்குப் பல நன்மைகள் ஏற்படும் அதேநேரம் பல போலியான டீப்ஃபேக்குகள் உருவாக்கப்பட்டு, அவை தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் தன்னை இரவில் தூங்க விடாமல் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், அவர் ஏஐ எந்தளவுக்கு வலிமையானது என்பதை விளக்கினார். வரும் காலங்களில் புதிய மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை எனப் பல்வேறு காரணங்களுக்காக ஏஐ உதவும் என்ற சுந்தர் பிச்சை, அதன் அதிவேக வளர்ச்சி காரணமாகச் சில அபாயங்களும் இருப்பதாக எச்சரித்தார்.
தூங்கவே முடியல
அவர் மேலும் பேசுகையில், "எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும் இரண்டு வகையான பயன்கள் இருக்கவே செய்யும். சில தீய சக்திகள் AIஐ பயன்படுத்தி உண்மையில் இருந்து வேறுபடுத்த முடியாத போலிப் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. இது நிஜமாகவே கவலையளிக்கும் ஒரு பிரச்சனை. இதை நினைத்தால் எனக்குத் தூக்கமே வருவதில்லை.. இவற்றைப் பற்றித் தான் நாம் யோசிக்க வேண்டும். பிரச்சினையைச் சரி செய்து, சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே மனிதக்குலப் பயணமாக இருந்துள்ளது.. அதற்கு இந்தத் தொழில்நுட்பமும் விதிவிலக்கு இல்லை" என்றார்.
கூகுள்
கூகுள் நிறுவனம் புதிதாக ஒன்றை வெளியிடும்போது என்ன செய்வீர்கள்.. மக்களின் ரியாக்ஷனை எப்படித் தெரிந்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு அவர், "எனக்கு இது தொடர்பாக ரிப்போர்ட் வரும். ஆனால், அதை தாண்டி நான் நேரடியாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வேன். ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதற்கான வரவேற்பையும், யூசர் அனுபவத்தை நேரடியாகத் தெரிந்து கொள்வேன். சாதாரண யூசர்கள் எப்படி யூஸ் செய்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முயல்வேன்" என்றார்.












Click it and Unblock the Notifications