2025 தை மாதம் ராசி பலன்: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட காற்று வீசப் போகுது?.. பணம் கொட்டும்
சென்னை: 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்தாலும் தமிழ் மக்களுக்கு தை மாதம் மிகவும் முக்கியமானது. அறுவடை திருநாள், தமிழர் திருநாள் என விழாக்கள் நிறைந்த இந்த தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அதனாலேயே தை மாதம் வரை காத்திருந்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். இந்தப் பதிவில் ரிஷப ராசிக்கான தை மாத ராசி பலன்களை காணலாம்...
ரிஷபம் ராசிக்கு சூரியன் ஒன்பதாம் இடத்தில் வீற்றிருக்கிறார். இது தாய், தகப்பன் ஆசி, உதவிகள் ஆகியவற்றை குறிக்கும். வாழ்க்கை பாதையில் முன்னோர்களின் வழிகாட்டுதல் மூலம் வெளிச்சம் பாய்ச்சும் மாதமாக இருக்கும். சூரியன் ஒன்பதாம் இடத்தில் இருந்து கொண்டு உங்களின் மூன்றாம் இடத்தை பார்க்கிறார். இதனால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவடையும்.

இளைஞர்களுக்கு தைரியம் அதிகரித்து எடுத்த காரியங்களில் வெற்றிகள் குவியும். சூரியன் பார்வை கடகத்தில் இருப்பதால் அரசாங்கத்தில் இருந்து கிடைக்க கூடிய உதவிகள், ஒப்பந்தங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். அரசுத்துறை சார்ந்து பணியாற்றும் அனைவருக்குமே எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக அமையும். உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
சுய தொழில் செய்வோரின் பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும். 9 மற்றும் 10 ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் 10 ஆம் இடத்தில் வீற்றியுள்ளார். இதனால் தந்தை வழி சொத்து, தந்தை வழி உறவுகளால் பலனடைவீர்கள். சூரியனும், சந்திரனும் அருகருகே அமர்ந்திருப்பதால் எதிலும் யோசித்து திட்டமிட்டு முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும்.
11வது இடத்தில் ராகு பகவான் வீற்றிருக்கிறார். வெளிநாட்டில் இருப்போருக்கு வீடு, மனை, வாகனம் வாங்கக் கூடிய அமைப்புகள் உருவாகியுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்காக முயற்சி செய்வோருக்கும் நல்ல செய்தி கிடைக்கும். வாய்ப்புகள் வரும்போது பதற்றத்தை தவிர்த்து கவனமுடன் அணுக வேண்டும்.
குரு பகவான் ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் உங்கள் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமைப்பு உருவாகும். நீண்ட காலமாக செல்ல நினைத்த கோயில்கள், சொந்த பந்தங்களை சந்திப்பார்கள். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்றாக இணைந்து பயணிப்பார்கள்.
பலருக்கு திடீர் திருமண யோகம் ஏற்படும். குடும்ப உறவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். குரு மகரத்தை பார்ப்பதால் சிவகடாட்சம் அமைப்பு வருகிறது. இதனால் புதிய கடன்களை பெறுவது, ஏற்கனவே பெற்ற கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் விருத்தி அடையும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும்.
சிலருக்கு கண், காது, மூக்கு, தொண்டை தொடர்பாக அவ்வபோது லேசான பிரச்னைகள் வந்து செல்லும். உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சனீஸ்வரன் பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இதனால் சிந்தனைகள் அதிகரிக்கும். சிறு பிரச்னைகளை கூட பெரியளவுக்கு யோசித்து கவலை கொள்வீர்கள். இருப்பினும் அதைப்பற்றி பெரிதாக யோசிக்காமல் மற்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
மொத்தத்தில் தை மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் வெற்றியை தான் கொடுக்கும். இருப்பினும் மனதில் அவ்வபோது ஏற்படும் கவலைகள் நீங்க அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதால் பிரச்னைகளை தகர்த்தெறிந்து வேகமாக முன்னேற உதவும்.












Click it and Unblock the Notifications