கடக ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சோதனைகளை சாதனைகளாக மாற்றி ஜெயிப்பீர்கள்
பிலவ தமிழ் புத்தாண்டில் கடக ராசியில் பிறந்தவர்கள் என்னென்ன பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: கடக ராசிக்காரர்கள் பிலவ வருடத்தில் சில சோதனைகளை சந்தித்தாலும் அதை சாதனையாக மாற்றி ஜெயிப்பீர்கள். மங்களகரமான பிலவ தமிழ் புது வருடம் சித்திரை 1ஆம் தேதி புதன்கிழமை சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
புத்தாண்டு பிறக்கும் போது உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் ராஜ கிரகங்கள் சூரியன், சுக்கிரன், சந்திரன் கூடியுள்ளன. ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு, ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கின்றனர். ஐந்தாம் வீட்டில் கேது சஞ்சரிக்கிறார்.
கடக ராசியில் பிறந்த நீங்கள் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். போராட்டமே வாழ்க்கையாக இருந்தாலும் இந்த பிலவ தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு வரும் சோதனைகளை சாதனைகளாக மாற்று வீர்கள். எந்த வேலையையும் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வீர்கள்.
வெற்றிகரமான புத்தாண்டு
கடக ராசியில் பிறந்த நீங்கள் கடந்த பல ஆண்டுகாலமாகவே நீங்கள் சந்தோஷத்தை அனுபவித்து வருகிறீர்கள் என்றாலும் சனிபகவான் கண்டச்சனியாக சஞ்சரிப்பதால் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகளை சந்தித்து வந்தீர்கள். எத்தனை முறை விழுந்தாலும் விடா முயற்சியோடு போராடி மீண்டு எழுவீர்கள். எதிர்நீச்சல் போட்டு ஜெயிக்கும் உங்களுக்கு இந்த ஆண்டு அற்புதமாக உள்ளது. ஆட்சி பெற்ற சனியின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். திடீர் தனவரவு ஏற்படும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.
வேலையில் புரமோசன்
குரு எட்டாம் வீட்டில் இருந்தாலும் குருவின் பார்வை வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களின் பலம் அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைத்த கல்லூரியில் உயர்கல்வி படிக்க யோகம் உண்டு. உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
முதலீடுகளில் லாபம்
சுக்கிரன் ஆண்டின் தொடக்கத்தில் உச்சம் பெற்ற சூரியனுடன் பயணம் செய்வதால் அம்மா உடன் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய தொழில் வியாபாரம் தொடங்கலாம். அமைதியும் மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். ஆவணி மாதத்திற்கு மேல் வீடு கட்டலாம். புது வண்டி வாகனம் வாங்கலாம். முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதி ஏற்படும் என்றாலும் சின்னச் சின்ன மன உளைச்சல் ஏற்படும். இந்த ஆண்டு புத்திரபாக்கியம் கிடைக்கும். கண் திருஷ்டி அதிகம் இருப்பதால் கவனம் தேவை.
காதல் திருமண யோகம்
நீண்ட நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் இந்த ஆண்டு முடிவுக்கு வரும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். காதல் வாழ்க்கையும் குதூகலமாக இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காலம் கை கூடி வருகிறது. சிங்கிள்ஸ் ஆக இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு காதல் மணியடிக்கும்.
பரிகாரம் என்ன
ஆவணி மாதம் வரை அதிசாரமாக அஷ்டம குரு நடைபெறுவதால் வியாழக்கிழமை காலையில் குரு ஹோரையும் விளக்கேற்றி வழிபடவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பாலினத்தவர்களிடம் கவனம் தேவை. செப்டம்பர் 13ஆம் தேதிக்கு மேல் தொழிலில் பண மூதலீடு செய்வது நல்லது. பெயர் புகழ் தேடி வரும். அரசு வேலை கிடைக்கும். தலைமைப்பண்பு தேடி வரும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். மொத்தத்தில் கடக ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.