மார்கழி நோன்பு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 5 #Margazhi,#Thiruppaavai
மார்கழி நோன்பின் ஐந்தாம் நாள் திருப்பாவை, திருவெம்பாவையின் ஐந்தாவது பாடலை பாடி இறைவனை வணங்குவோம்.
சென்னை: மார்கழி மாதம் பக்தி மார்க்கத்திற்கு உரிய மாதம். இன்று ஐந்தாம் நாள் பிறந்திருக்கிறது. மார்கழி நோன்பின் ஐந்தாம் நாள் திருப்பாவை, திருவெம்பாவையின் ஐந்தாவது பாடலை பாடி இறைவனை வணங்குவோம்.
கண்ணனின் திருநாமங்களை தூய மனதோடு போற்றி பாடி நான் தியானித்தோம் என்றால் நம்முடைய பாவங்கள் எல்லாம் நெருப்பில் இட்ட தூசுபோல மறைந்து போகும் என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.

திருப்பாவை பாடல் - 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்:
வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவன் கண்ணன். இவனது விளையாட்டுத்தனங்களைப் பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் தழும்பு ஏற்பட்டது. தாமோதரன் என்ற பெயரை தாங்கிய கண்ணபிரானைத், தூய்மையான உடல் உள்ளத்துடன் வந்து, அவன் திருவடிகளில் தூய மலர்களைத் தூவி வணங்கி, வாயினால் அவனது நற்குணங்களைப் போற்றிப் பாடி, சிந்தையில் அவனை மட்டுமே நிறுத்தி நாம் தியானித்தோமானால், முன்னர் நாம் அறிந்து செய்த பாவங்களும், இனிமேல் நாம் அறியாமல் செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பில் இட்ட தூசு போல தடயமின்றி அழிந்து போய் விடும் ! ஆகவே அம்மாயப்பிரானின் திருநாமங்களை விடாமல் சொல்லி, பாவை நோன்பிருப்போம், வாருங்கள் ! என்று அழைக்கிறாள் ஆண்டாள்.
திருவெம்பாவை பாடல் - 5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம் :
உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை நோக்கி பெண்கள் "முதலும் முடிவும் இல்லாத இறைவனான சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடி திருமாலும் பிரம்மாவும் சென்றபோது இறைவனார் சோதிப்பிழம்பாகி அருள்மலையாக நின்றார். அந்த அருள்மலையை திருமாலால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான்முகனாலும் காண இயவில்லை.
இத்தகைய அறிய வரும், பெரிய வருமாய் உள்ள சிவபெருமானை நாம் எல்லோரும் அறியும் ஆற்றல் உடையோம் என்று, பிறர் நம்பும்படி பால்போலும் தேன்போலும் இனிக்க இனிக்கப் பேசிய வாயினை உடைய வஞ்சகியே. உன்னுடைய வாசல் கதவினை திற என்கின்றனர். தோழியோ கதவை திறவாமல் இருக்கிறாள். உடனே பெண்கள் இறைவனின் திருப்புகழினைப் பாடுகின்றனர்.
"மண்ணில் வாழ்கின்றவர்களும், விண்ணுலகத்து தேவர்களும், ஏனைய உலகில் வாழ்பவர்களும் காண்பதற்கு அரிதான வடிவத்தினையும், நம்முடைய குற்றங்களை களைந்து எளியவர்களாகிய நம்மை ஆட்கொண்டருளி சீராட்டுகின்ற பெருங்குணத்தையும் பாடுகின்றோம். சிவனே...சிவனே என்று நெஞ்சுருகி உரக்க பாடுகின்றோம்.
எங்களின் பாடல் ஒலியையும் நீ உணர்ந்தவளாகத் தெரியவில்லை; உணர்ந்து விழிக்கவும்வில்லை. நீ இறைவனை மறந்து உன்னுடைய மயிர்சாந்து பூசிய கூந்தலை விரும்பி உறங்குகின்றாய். உன்னுடைய இத்தன்மையை என்னவென்பது? என்று வருத்தம் கொள்கின்றனர். இறைவழிபாட்டில் புறஅழகையும், தான் என்ற கர்வத்தையும் மறந்து, மன ஒன்றுதலோடு நெஞ்சுருகி முழு அர்ப்பணிப்புடன் வழிபட்டால் இறைவன் நம்மை ஆட்கொண்டருளுவான் என்பதை இப்பாடல் விளக்குகிறது.












Click it and Unblock the Notifications