காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி.. கும்பம் ராசிக்கு கூரைய பிச்சுட்டு கொடுக்கும் மாசி மாதம்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் (13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கும்ப ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.
உங்கள் ராசியிலேயே சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் குரு பகவான் உள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது. ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்கிரம் பெற்று அமர்ந்துள்ளார். ராசிக்கு எட்டாம் இடத்தில் கேது அமர்ந்துள்ளார்.

மாசி 1 ஆம் தேதி (13.2.2025) சூரிய பகவான் 12ஆம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) ஐந்தாம் இடத்தில் செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் உங்கள் ராசிக்குள் இருந்து இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
புதன் மீன ராசியில் நீச்சமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கும். ஒரு கிரகம் உச்சத்தில் இருந்து மற்றொரு கிரகம் நீச்சமாகும்போது. அதை நீச்சபங்க ராஜயோகம் என்பார்கள். இது நல்ல பலன்களை தரும். மாசி 17 ஆம் தேதி (1.3.2025) உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் வக்கிரமாக போகிறார்.
சூரியன் உங்கள் ராசிக்குள் வருவதால் கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழிலில் உள்ள தடைகள் நீங்கும். வெளிநாடு, வெளிமாநில வாய்ப்புகளால் வருவாய் அதிகரிக்கும். அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவையில் உள்ள தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் உங்களை உயரதிகாரி பாராட்டி பதவி உயர்வு உள்பட கூடுதல் பொறுப்புகளை வழங்குவார். உங்கள் திறமைக்கேற்ற புதிய நல்ல பணி கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் உங்களின் தலைமை பண்பு நன்கு வெளிப்படும். தைரியம், தன்னம்பிக்கை உயரும். குலதெய்வ வழிபாட்டால் நன்மை உண்டு. வீண் விரயம் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல ஓய்வு கிடைக்கும்.
குழந்தை பாக்கியத்துக்காக முயற்சி செய்வோருக்கு இந்த காலத்தில் நல்ல தகவல் கிடைக்கும். செவ்வாய் வக்கிர நிவர்த்தியால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். ராஜா போல மனதில் நினைத்த அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பாக செயல்படுவார்கள்.
புதன் கிரகத்தால் உங்களின் அனைத்து ஆசைகளும் அதிகரிக்கும். காதல் அமைப்புகளில் வெற்றி கிடைக்கும். திட்டங்கள் நிறைவேறும். மனதில் நீண்ட காலமாக ஆசைப்பட்ட காரியங்கள் நடைபெறும். சமூகத்தில் உங்களின் பெயருக்கு மதிப்பு, மரியாதை உயரும். நன்கு பணம் சம்பாதிக்க முடியும். தாயாரால் நல்ல ஆதரவு கிடைக்கும்.
கால் வலி அதிகரிக்கும். சிந்தனையில் அவ்வப்போது குழப்பம் ஏற்படும். குடும்பத்துடன் தொலை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவும். குடும்பத்தில் எதிர்பாராத நேரத்தில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. வீண் விவாதங்ளை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. ஆண் - பெண் உறவிலும் கவனம் தேவை. அருகில் உள்ள மகாலட்சுமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதால் பிரச்னைகள் நீங்கும்.












Click it and Unblock the Notifications