மன்மத ஆண்டு: கடகம் ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கடகம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் பலன்களை பார்ப்போம்.
தான், தனது, தனக்கென்று ஓர் கொள்கை, பிடிவாத குணமும், சாமர்த்தியம், தைரியம் உள்ளவர்களே எவர் எதைச் சொன்னாலும் அதை ஆய்தறிந்து பலரிடத்தில் கேட்டு விபரம் தெரிந்து கொண்டு முடிவில் தன் எண்ணப்படி நடப்பவர்களே எளிதில் எதையும் நம்பாதவர்களே பிறர் தனது ஆணைக்கு கட்டுப்பட விரும்புவர்களே தன் காரியத்தை சாதித்துக் கொள்ளும் வல்லமை கொண்டவர்களே பிறரை எடை போட்டு ஆய்பவர்களே. தனம் படைத்தவர்களோடு பழகுபவர்களே உயர்வான ஒன்றிருக்க அதனினும் மேலான பொருளைத் தேடி செல்பவர்களே தன்னலம் கொண்ட கடகம் ராசி அன்பர்களே உங்களுக்கு இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களைப் பார்ப்போம்.
ராசியில் குரு
இந்த ஆண்டு தொடக்கம் முதலே உங்கள் ராசியில் குரு இருக்கிறார் இதனால் கலகம், விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் கூறப்படுவது உண்டு. அவரால் வீண் அலைச்சலும் மனதில் வீண் குழப்பமும் ஏற்படும் அதற்காக கவலைப்படவேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறுகள் அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழி வகுப்பார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்திட வழி வகுப்பார்.
துணிச்சல் தரும் குரு
குரு ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு செல்கிறார். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். அதுவரை உள்ள மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் பல வழிகளில் வரும், சேமிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். பொன்மகளால் பொருளும், நிலமும் அள்ளித்தர வாய்ப்புண்டாகும். பகைவர்களின் சதி எடுபடாமல் அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். அக்கம் பக்கத்தினர் மெச்சும் விதத்தில் வாழ்வு வாழ்வீர்கள்.
நன்மை தரும் ராகு
நிழல் கிரகமான ராகு தற்போது மூன்றாம் இடத்தில் இருக்கிறார். எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்குவார் சிறிய முயற்சியில் கூட பெரிய பலனை தர ராகு காத்திருக்கிறார். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது மீனம் ராசியில் இருக்கிறார். அங்கு அவரால் முயற்சிகளில் தோல்வியையும், பொருள் நஷ்டமும் எற்படலாம். தேவையற்ற மன உளைச்சல்களை எற்படுத்த வாய்ப்புகளுண்டு.
பரிகாரம்
குச்சனூர், திருநள்ளார், ஏதேனும் ஓர் தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் தரிசனம் மற்றும் தினசரி காலையில் விநாயகப் பெருமான் தரிசனம், சனிக்கிழமை காக்கைக்கு எள் சாதம் அளிப்பதும், ஏழை, எளியவர்களுக்கு வஸ்த்ர தானம், அன்ன தானம் செய்வதால் இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.