ஐப்பசி மாதத்தில் நிகழும் சூரிய,சந்திர கிரகணங்கள்..4 கிரக கூட்டணியால் யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்
சென்னை: ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். நவக்கிரகங்களில் ராஜகிரகமாக கருதப்படும் சூரியன் சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசியில் நீச்சமடைந்துள்ளார். இந்த மாதம் சூரியன், சந்திரன் கிரகணங்களும் நிகழ உள்ளன. துலாம் ராசியில் சில நாட்கள் சூரியன், சந்திரன், கேது, சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் இணைந்து சதுர் கிரக யோகத்தை தரப்போகின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். துலாம் ராசியில் நீச்சம் பெற்று பயணிக்கும் சூரியனுடன் கேதுவும், ஆட்சி பெற்ற சுக்கிரனும் பயணம் செய்ய இருக்கின்றன. இதனால் சூரியன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று பயணம் செய்யப்போகிறார். வக்ர நிலையில் பயணித்த சனிபகவான் இந்த வாரத்தில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார்.
சில ராசிகளில், சுக்கிரன் சூரியன் இணைவு மிகப்பெரிய ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் சூரியனுக்கு பலம் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம். ஏற்கனவே துலாம் ராசியில் கேது அமர்ந்து இருக்கிறார், துலாம் ராசியில் சூரியன் கேது உடன் இணைகிறார். ஐப்பசி 2 ஆம் நாள், சுக்கிரன் இணைந்த ஒரு வாரத்திலேயே புதனும் இணைகிறார். எனவே, சூரியன், சுக்கிரன், புதன், கேது இந்த நான்கு கிரகங்களுமே கிட்டத்தட்ட 20 நாட்கள் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் இருக்கின்றன. இதனால் ஒரு சில குறிப்பிட்ட ராசிகளுக்கு பெரிய தாக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமில்லாமல் துலாம் ராசி நட்சத்திரங்களான சுவாதி விசாகம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வரும் போது சந்திரனும் சேர்ந்து ஐந்து கிரகங்கள் ஒரே ராசியில் இருக்கும் அம்சமும் வருகின்றன. இந்த கிரகங்களை நேர் பார்வையாக ராகு பார்ப்பதால் கூடுதலாக தாக்கம் ஏற்படலாம்.
இதை பாருங்க.. இது தான் நம்ம சூரியனின் குளோஸ் அப் படங்கள்.. எப்படி இருக்கு பாருங்களேன்
சூரிய சந்திர கிரகணங்கள்
ஐப்பசி மாதம் 8ஆம் தேதி அக்டோபர் 25ஆம் தேதி துலாம் ராசியில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இதே மாதத்தில் 22ஆம் தேதி நவம்பர் 08ஆம் தேதி மேஷ ராசியில் ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் நிகழப்போகிறது.
இந்த கிரகணங்களால் இன்னும் சில மாதங்களுக்கு சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. யாருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
மேஷம்
களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் நான்கு கிரகங்கள் சேரப்போவதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சூரியன் உங்கள் ராசியை பார்வையிடுவதால் ராஜயோகத்தை தரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கேட்ட இடத்திற்கு புரமோசன் கிடைக்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.புது வேலைக்கு முயற்சி செய்யலாம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செவ்வாய் 3ஆம் வீட்டில் மறைந்து வக்ரமடைவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
வெற்றி மீது வெற்றி வரும்
புதன் சில வாரங்களுக்கு ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் கவனம் தேவை. புதனும் இம்மாத இறுதியில் 7வது வீட்டிற்கு வந்து உங்கள் ராசியை பார்க்கப்போகிறார். உங்களுக்கு இனி வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும். தொட்டது எல்லாம் துலங்கப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்த நாட்களாக நிறைந்துள்ளது. ஏழைகளுக்கு உதவுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க சந்தோஷங்கள் மேலும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சேரப்போகின்றன. சூரியன் ஆறாவது வீட்டில் பயணம் செய்வதால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். செவ்வாய் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வக்ர மடைந்து மீண்டும் ராசிக்கு திரும்புவார். சின்னச் சின்ன சண்டைகள் நீங்கும். பேச்சில் நிதானம் தேவை. ராசி நாதன் ஆறாவது வீட்டில் பயணம் செய்வதால் கவனமும் நிதானமும் தேவை. ஆறாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைவதால் இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு.
தொழிலில் லாபம்
பாக்ய ஸ்தானத்தில் உள்ள சனி பகவான் வக்ரநிலையில் இருந்து மீண்டு நேர்கதிக்கு திரும்புவதால் ஆன்மீக பயணம் செய்வீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த கோவில்களுக்கு சென்று வருவீர்கள். வருமானமும் லாபமும் அதிகம் கிடைப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள் மாத இறுதியில் புதன் பகவானும் ஆறாம் வீட்டிற்கு வருவதால் தொழில் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகளில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அலுவலகத்தில் உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். சதுர் கிரக யோகத்தால் பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். ஐப்பசி பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று வருவது சிறப்பு. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள் பாதிப்புகள் குறையும்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டில் நான்கு கிரகங்கள் இணைவதால் சிறப்பான யோகம் கிடைக்கப்போகிறது. காரியத்தடைகள் நீங்கி வெற்றிகரமாக முடிவடையும். பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியம் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விலகிச்சென்றவர்கள் மீண்டும் இணைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசியில் பயணம் செய்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
திருமண யோகம் கைகூடும்
உங்கள் ராசி நாதன் புதன் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். தொழில் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். அக்டோபர் மாத பிற்பகுதியில் புதனும் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டிற்கு வந்து சூரியன், சுக்கிரன், கேது உடன் இணையப்போகிறார். இதன் மூலம் உங்களுக்கு யோக காலம் ஆரம்பமாகிறது. சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரப்போகிறது. திடீர் திருமண யோகம் கைகூடி வரும். திருமணம் முடிந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றுவது நல்லது.
கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானம் வலுவடைந்துள்ளது. நிறைய நல்லது நடக்கப்போகிறது. உங்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது. இந்த மாதம் நல்ல செய்தி தேடி வரும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மனதில் நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கும் காரியம் நிறைவேறும். பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல காரியங்கள் நடைபெறும்.
குடும்பத்தில் சந்தோஷம்
ராசிக்கு சாதகமாக குரு பகவான் பயணம் செய்கிறார். குருபகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வேலையில் புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சம்பள உயர்வும் அதிகரிக்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வழியில் நல்ல காரியம் நடைபெறும். இந்த மாதம் சொத்துக்கள், வீடு எதுவும் வாங்க வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். மாத பிற்பகுதியில் வேலையில் பளு அதிகரிக்கும் மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதிப்புகள் குறைய கபாலீஸ்வரர் கற்பகாம்பாளை மனதிற்குள் நினைத்து வணங்குங்கள்.