சந்திர கிரகணம் 2020: சூரிய சந்திரனை பழிவாங்கும் ராகு கேது - புராண கதை
சந்திர கிரகணம் இன்று பெனும்பிரல் சந்திர கிரகணமாக நள்ளிரவில் நிகழ உள்ளது.
சென்னை: சந்திர கிரகணம் இன்று நள்ளிரவில் நிகழ உள்ளது. ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெனும்பிரல் சந்திர கிரகணமானது இன்று இரவு 11:15 மணிக்கு ஆரம்பித்து ஜூன் 6 தேதி சனிக்கிழமை அதிகாலை 2:34 மணி வரை நீடிக்கிறது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணமாகும். கிரகணங்கள் நிகழ்வது வானியல் நிகழ்வாக இருந்தாலும் ஜோதிட ரீதியாக இதனைப்பற்றி பல சுவாரஸ்யங்கள் சொல்லப்படுகின்றன. பாம்பு கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள் சூரியனையோ சந்திரனையோ விழுங்கும் போது கிரகணம் தோன்றுவதாக கூறுகின்றனர்.
Recommended Video
பொதுவாகவே சந்திரகிரகணம் முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், புறநிழல் சந்திர கிரகணம் என்கின்றனர். நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும், அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.
முழு சந்திர கிரகணம் என்பது பூமியின் கரு நிழலிற்குள் சந்திரன் கடந்து செல்லும் போது ஏற்படும் இது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வு.
பகுதி சந்திரகிரகணம் என்பது சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல் பாதியளவு நேர்கோடாக வந்தால் பகுதி நேர சந்திர கிரகணம் நிகழ்கிறது.
புற நிழல் நிலவு மறைப்பு அல்லது பெனும்பிரல் சந்திர கிரகணம் என்பது பூமியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. அப்போது நிலவின் மேற்பகுதி இருண்டு இருக்கும். பூமியின் புறநிழல் வழியாக சந்திரன் முழுமையாக கடந்து செல்வது அரிதாகவே இருக்கும். புற நிழல் சந்திர கிரகணத்தை உற்று நோக்கித்தான் உணர்ந்து கொள்ள முடியும். இந்த சந்திர கிரகணத்தை பார்ப்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த கிரகணம் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிகழ்கிறது. இதற்கு ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

சந்திர சூரிய கிரகணங்கள்
ராகு உடன் சந்திரன் இருக்கும் போது ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் என்றும் கேது உடன் சந்திரன் இருக்கும் கேது கிரகஸ்த சந்திர கிரகணம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். இன்றைய தினம் விருச்சிக ராசியில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது கேதுவை ஒட்டிய சந்திர கிரகணம். தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.
இன்றைய சந்திர கிரணத்திற்கு விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களும் பரிகாரம் செய்ய வேண்டும். சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழ்வதே ஒரு பழிவாங்கும் நிகழ்வு என்றே கூறுகின்றனர். சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் வரம் பெற்றே ராகு கேது கிரகணத்தை ஏற்படுத்துவதாக புராண கதைகள் கூறுகின்றன.

வேஷம் போட்ட சுவர்பானு
பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வாசுகி என்ற பாம்புதான் உதவியது. அமிர்தம் வெளிவந்த பின்னர் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தை கொடுத்து நமக்கு அல்வா கொடுத்தாலும் கொடுத்து விடுவார் மோகினி என்று நினைத்தார் சுவர்பானு. தேவர் போல வேடமிட்டு அமிர்தத்தை விஷ்ணுவிடம் இருந்து வாங்கி மடக்கென்று குடித்து விட்டார். இந்த செயலை சூரியனும் சந்திரனும் பார்த்து விஷ்ணுவிடம் சொன்னார்கள். ஆனாலும் விஷ்ணுவிற்கு தெரியாதா ஒரு காரணத்தோடுதான் அமிர்தத்தை குடிக்கக் கொடுத்தார்.

தலையை வெட்டிய விஷ்ணு
சூரியனும் சந்திரனும் மோகினியிடம் போய் நடந்த விசயங்களை போட்டுக்கொடுக்க, கோபம் கொண்ட விஷ்ணு தனது கையில் இருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் தட்டவே தலைவேறு முண்டம் வேறாக விழுந்து இரண்டாக வெட்டுப்பார். அமிர்தம் குடித்த சுவர்பானுவிற்கு உயிர் போகவில்லை.

விஷ்ணுவின் செயல்
சுவர்பானு ஒப்பந்தத்தை மீறி அமிர்தத்தை ஏமாற்றி குடித்ததால் அசுரர்களுக்கு அமிர்தம் கிடையாது என்று கூறினார். இதனால் ஏமாற்றமடைந்த அசுரர்கள் பானையை பறிக்க முயல எல்லா அமிர்தத்தையும் தேவர்களுக்கே கொடுத்து விட்டு பானையை காலி செய்து விட்டார்.

ராகு கேது
இதற்கெல்லாம் காரணம் சுவர்பானுதான் என்று அசுரர்கள் கோபம் முழுவதும் சுவர்பானு மீது திரும்பியது. வெட்டுப்பட்டு துடித்துக்கொண்டிருந்த சுவர்பானுவை தங்களின் குலத்தில் இருந்தே விலக்கி வைத்து விட்டனர். தனது நிலையினை கூறி பிரம்மாவிடம் முறையிட்டார் சுவர்பானு. இதற்கு மாற்று ஏற்பாடு மகாவிஷ்ணுவால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறி கை விரித்து விட்டார் பிரம்மா. விஷ்ணுவை சரணடைந்தார் சுவர்பானு.

வரம் பெற்ற ராகு கேது
பாம்பு உடலை மனித தலையோடு இணைத்தார் விஷ்ணு. பாம்பு தலையை மனித உடலோடு இணைத்தார். மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது என அழைக்கப்பட்டனர். உயிர் ஒன்றாக இருந்தாலும் எதிர் எதிர் திசையில் சஞ்சரிக்கின்றனர். தங்களின் இந்த நிலைக்குக் காரணமான சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் தவமிருந்து வரம் பெற்றனர்.

புராண கதைகள்
ஒரு ஆண்டிற்கு நான்கு முறை சூரியன், சந்திரனின் பார்வை பூமியின் மேல் விழாமல் இருக்கும் என்ற வரத்தை கொடுத்தார். இதுவே சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எனப்படுகிறது. இதனைத்தான் சூரிய சந்திரனை ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குவதாக புராண கதைகள் உலா வருகின்றன.












Click it and Unblock the Notifications