குருபெயர்ச்சி: கோவில்களில் களைகட்டிய குருபகவானுக்கு லட்சார்ச்சனை, பரிகார பூஜைகள்
சென்னை: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை, பரிகார பூஜைகள் களை கட்டியுள்ளன. பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற பரிகார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்களின் ராசிக்கேற்பு பரிகாரம் செய்து குருபகவானை வழிபட்டனர்.
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதை குரு பெயர்ச்சியாக கொண்டாடுகின்றனர். குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் பிரவேசிப்பதை முன்னிட்டு ஸ்ரீதட்சிணாமூர்த்தி மற்றும் குரு பகவான் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.
மதுரை குருவித்துறை குருபகவான் ஆலயம், தஞ்சாவூர் அருகில் உள்ள திட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயம், ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோயில், சென்னை கோயம்பேடு அருகில் உள்ள பாடி திருவலிதாயம் திருக்கோயில், அரக்கோணத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம், தக்கோலம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம், திருச்சி உத்தமர்கோவில், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மா கோயில் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் நடைபெற்று வரும் பரிகார பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர்.

பாடி திருவலிதாயம்
பாடி திருவலிதாயம் ஆலயம் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 21வது தலமாகும். மூலவர் சுயம்பு லிங்கமாக திருவலிதாய நாதர், வல்லீசர் எனவும், அம்மன் தாயம்மை, வடமொழியில் ஜகதாம்பாள் எனவும் திருநாமம் கொண்டும் அருள் புரியும் ஒப்பற்ற திருத்தலம். இந்தத்தலத்தில் வியாழபகவான் தனிசந்நதியில் கோயில் கொண்டுள்ளார்.

பரிகார பூஜை
குருபெயர்ச்சியாவதை முன்னிட்டு ஆகஸ்டு 1ம் தேதி லட்சார்ச்சனை விழா தொடங்கியது. குரு பெயர்ச்சியான இன்று குரு பரிஹார ஹோமம் நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவிந்தவாடி அகரம்
அரக்கோணம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக் கிராமமான கோவிந்தவாடி அகரத்தில் குரு தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் தனி சன்னிதியில் குரு தட்சிணாமூர்த்தி உள்ளார். இங்கு நடைபெற்ற குரு பகவான் லட்சார்ச்சனை விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தக்கோலம்
தக்கோலம் ஸ்ரீஜலநாத ஈஸ்வரர் கோயிலில் குரு தட்சிணாமூர்த்தி கோஷ்ட மூர்த்தியாக தெற்கு நோக்கி சாய்ந்த கோலத்தில் அமைந்துள்ளார். இது போன்று, வேறு எங்கும் தரிசிக்க அபூர்வமான தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் சிறப்பு என்கிறார்கள். இதேபோல் தஞ்சாவூர் திட்டை, ஆலங்குடி முதலான தலங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குருவித்துறை குருபகவான்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள குருபகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை தொடங்கியது. புராண கால பெருமையுடைய இத்தலத்தில் குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

சிறப்பு லட்சார்ச்சனை
குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. இந்த லட்சார்ச்சனை இன்று காலை முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிகார மகாயாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications