குலசையில் பேயுருவம் பெற்று தலையால் நடந்து கயிலாயம் சென்ற காரைக்கால் அம்மையார்
கணவன் விரும்பாத என் அழகுத் திரு மேனியை அழித்து பேயுருவம் தாருங்கள்!'' என்று ஈசனை வேண்டவே, புனிதவதியின் அழகு அழிந்து, பேயுருவம் கொண்டாள்! இது நிகழ்ந்தது குலசேகரபட்டினம் என்பது நிறைய பேருக்கு தெரியாது.
Recommended Video
திருநெல்வேலி: காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, பேய்க்கோலம் பூண்டார். பேய்க்கோலம் தாங்கிய அம்மையார், சித்தமெல்லாம் சிவமயமாக திகழந்தார். அற்புத திருவந்தாதியும் திரு இரட்டை மணி மாலையும் பாடியருளினார். அந்த தலம் இன்றைக்கும் குலசேகரபட்டினத்தில் உள்ளது.
குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்கு சிறப்பு பெற்ற இடம். இந்த ஊரில் மாங்கனி திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இங்கு வரும் 28ஆம் தேதியன்று மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.
புனிதவதியாக பிறந்து இல்லறம் என்னும் நல்லறத்தை சிறப்பாக நடத்தி வந்தபொழுது, இவரை தெய்வீகப் பெண் என்பதை உணர்ந்த கணவன், உடனேயே இவரை விட்டு விலகி சென்று விடுகிறார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் குலசேகரபட்டினத்தில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகள் பிறக்க புனிதவதி என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்.
தெய்வமாக வணங்கிய கணவன்
பரமதத்தர் குலசேகபட்டினத்தில் இருப்பது அறிந்த புனிதவதியின் காரைக்காலில் இருந்து ஓடோடு வந்தார். புனிதவதியை எதிர்கொண்டு அழைத்த பரமதத்தர், மனைவி-மகளுடன் புனிதவதியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். உறவினர்கள் அதிர்ந்தனர்.
அவர்களிடம், ''புனிதவதி மனிதப் பிறவி அல்ல; தெய்வம். நீங்களும் வீழ்ந்து வணங்குங்கள்!'' என்றார். அவரின் கருத்தறிந்த புனிதவதியார் கலங்கவில்லை.
பேயுருவம் தந்த இறைவன்
கணவனுக்கு தேவையற்ற இந்த சதையும் அழகு, தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். பேயுருவம் பெற்ற காரைக்காலம்மையார் அதன் பிறகு இறைவன் அருளால் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலையைப் பாடிய பிறகு, கயிலை மலையான் தரிசனம் காண விரும்பி கயிலைக்குச் சென்றார்.
தலையால் நடத்த அம்மை
பனிகள் நிறைந்த இறைவன் வசிக்கும் இடத்தை காலால் மிதித்து கடக்க விரும்பாமல், தலையால் நடந்து செல்ல, அதைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் 'வாரும் என் அம்மையே' என அழைத்தார். யாது வேண்டும் என்று சிவன் கேட்க அதற்கு அம்மையோ,பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னடியை மறவாமை வேண்டும். மகிழ்ந்து வாடி இன்னும் வேண்டும் நான் இறைவா! நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க வேண்டும்' என்று வேண்டினார்.
சிற்பத்தில் பேயுருவம்
உடனே ஈசன், திருவாலங்காட்டிற்குச் சென்று தனது ஊர்த்துவ தாண்டவமதைக் காணக் காத்திருக்கச் சொல்லி அருளினார். அதோடு, ஆலங்காட்டினை அவர் வந்தடைய, வழியும் காட்டி அருளியுள்ளார். அங்கு காரைக்காலம்மையார் ஈசனின் திருநடனத்தை காணும் பேற்றினைப் பெற அது முதற்கொண்டு, ஆடவல்லானின் சிற்பத் திருமேனியின், திருவடி கீழ் பேயாரும் இடம் பெற வைப்பது சிற்ப மரபாகியது.
மாங்கனி பிரசாதம்
ஆனி பவுர்ணமி நாளில் காரைக்காலில் மட்டுமல்ல, குலசேகரபட்டினத்திலும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. ஜூன் 28ஆம் தேதியன்று காரைக்கால் அம்மையாருக்கு 2000 மாங்கனிகளை படையலிட்டு வணங்கி, தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருச்செந்தூர் செல்பவர்கள் குலசேகரபட்டினம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் காரைக்கால் அம்மையார் பேய் உருவம் பெற்ற தலம் அமைந்துள்ளது. வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இல்லங்குடி என்பவர் இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்து வருகிறார். திருச்செந்தூர் செல்பவர்கள் குலசை சென்று காரைக்கால் அம்மையாரையும் தரிசனம் செய்யலாம்.