ஆவணி மாதம் ரோகிணி நன்னாளில் அஷ்டமி திதியில் அவதரித்த கிருஷ்ணர் #Jenmastami
ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணன் அவதரித்தார். கண்ணனின் அவதாரமே கம்ச வதத்திற்கானது என்று பலர் கூறினாலும் தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தார் பகவான் கண்ணன் என்பதுதான் உண்மை.
சென்னை: பகவான் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அதில் கிருஷ்ணர் அவதாரம் சிறப்பு வாய்ந்தது. தேவகியின் கருவில் உதித்தது முதல் குழந்தையாய் மண்ணில் பிறப்பது வரை பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். அவர் பிறக்கும் முன்பே அவரை காத்திருந்தார் அவரது தாய்மாமன் கம்சன். அதையும் மீறி ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி திதியில் அவரது அவதாரம் நிகழ்ந்தது.
திதிகளில் அஷ்டமி, நவமி ஆகாத நாட்கள் என்பார்கள். ஆனால் பகவான் ராமர் அவதரித்தது நவமி திதியில், கிருஷ்ணர் அவதரித்தது அஷ்டமி திதியில். எனவே இந்த இரண்டு திதிகளுமே வழிபாட்டிற்கு உரிய திதிகளாக மாற்றி விட்டார் மகாவிஷ்ணு.
பிறந்தது சிறையாக இருந்தாலும் வளர்ந்தது அன்னை யசோதாவின் மடியில்தான். ஒருத்தி மகனாய் பிறந்து இன்னொருத்தியின் மகனாக வளர்ந்தார் ஸ்ரீகிருஷ்ணர். உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் மண்ணுலகில் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை ஞாயிறு, செப்டம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை என இரண்டு தினங்கள் ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
கண்ணன் குழந்தையாக அவதரித்த பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார். அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில், பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், வெண்ணெய் சர்க்கரை கலந்த நெய்வேதியங்களை படைக்க வேண்டும். மேலும், வெல்லச்சீடை, உப்புச் சீடை, கை முறுக்கு, அவல் லட்டு, தேன்குழல், திரட்டுப்பால், என குழந்தைகளுக்கு விருப்பமான தின்பண்டகள் படைக்கப்படுகின்றது.
முதல் நாள் இரவு அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம் பிறந்த பின் ஆரம்பிக்கப்படும் இந்த விரதத்தை அன்ன ஆகாரம் ஏதும் உட்கொள்ளாமல் மறுநாள் சூரிய உதயத்திற்கு பின், ரோகினி நட்சத்திரம் முடிந்தவுடன் விரதமும் கலைக்கப்படுகிறது. ஏகாதசி விரதத்தில் கடைப்பிடிக்கப்படும் அனைத்து விரத முறைகளும் ஜென்மாஷ்டமியன்றும் கடைபிடிக்கப்படுகின்றது. ஸ்ரீஜெயந்தி நாளில் கண்ணனை வீட்டிற்கு அழைப்போம்.