திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா - ஆன்லைனில் டிக்கெட் விற்பனை - ஆதார் எண் அவசியம்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு தீப தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை தமிழக அரசின் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி அவசியம்.
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்கள் பெற விரும்பும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட்டுகளை புக் செய்ய ஆதார் எண், செல்போன் எண், இ மெயில் முகவரி அவசியமாகும்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவாக, வரும் 23ஆம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும்.
இதையொட்டி பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்வதற்கான சிறப்புக் கட்டண டிக்கெட் விற்பனை செய்யப்படுவது வழக்கம். புதன்கிழமையன்று காலை 11 மணிக்கு, இந்த டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியது.
பரணி தீப தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணத்தில் 500 டிக்கெட்டுகளும், மகா தீப தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணத்தில் 1,000 டிக்கெட்டுகளும், 600 ரூபாய் கட்டணத்தில் 100 டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.
முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி தேவை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். கட்டணச் சீட்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும்.
தரிசன டிக்கெட்டுகள் பெற விரும்புபவர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in இந்த இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.