புதையல் கிடைக்கும்... புதிய வகை வைரஸ் பரவும் - பிலவ வருட தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவும் என்று தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
சென்னை: கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து உலகம் இன்னமும் மீளாத நிலையில் புதிய வகை வைரஸ் ஒன்று இந்தியாவின் வடகிழக்கு திக்கில் உள்ள நாடுகளில் இருந்து வேகமாக பரவும் என்று கணித்துள்ளது பிலவ புது வருட தமிழ் பஞ்சாங்கம்.
பஞ்சாங்கம் கணிப்புகள் பல பலித்துள்ளன. நோய் பாதிப்பு, பெருமழை, வெள்ளம் என பல விசயங்களை பஞ்சாங்கம் கணித்துள்ளது அந்த கணிப்புகள் பலித்துள்ளன. இந்த பிலவ வருட தமிழ் பஞ்சாங்கத்தில் பல பொக்கிஷங்களை அரசு கையகப்படுத்தும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.
மங்களகரமான பிலவ வருடம் பிறந்துள்ளது. இந்த ஆண்டின் ராஜா செவ்வாய், மந்திரி புதன், அர்க்காதிபதி, மேகாதிபதி,சேனாதிபதி செவ்வாய், ரஸாதிபதி சூரியன், ஸஸ்யாதிபதி , நீரஸாதிபதி சுக்கிரன். வருஷ தேவதை லட்சுமி நரசிம்மர் ஆக வருகிறது.
பொக்கிஷம் கிடைக்கும்
இந்த ஆண்டு ராஜவாக பூமிகாரகன் செவ்வாய் வருவதால் அரசாங்கத்திற்கு பூமியில் உள்ள கனிம பொருட்கள் புதையலைப்போல கிடைக்கும். சுரங்கம், ஆழ்கடல் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று பல பொக்கிஷங்களை அரசு கையகப்படுத்தும்.
இன்னொரு வைரஸ்
இந்தியாவின் வட கிழக்கு திக்கில் உள்ள நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா, மங்கொலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக வேகமாக பரவும். உலகத்தையே ஆட்டிப்படைக்கும் வைரஸ் நோயினால் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.
வேலைவாய்ப்பு
இந்த ஆண்டில் பல விதமான புதிய தொழில்கள் உருவாகும். உலக அளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பணம் தொடர்பான மோசடிகள் அதிகரிக்கும்.
விபத்துகள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண் கடத்தல்கள் அதிகரிக்கும். திருட்டுகள் அதிகமாகும். சட்டத்தின் பிடியில் திருடர்கள் சிக்குவார்கள் தண்டனை கிடைக்கும். செவ்வாய் சனி தொடர்பு காரணமாக புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் விபத்துகள், போராட்டங்கள் அதிகம் நடைபெறும். இந்தியாவில் சாலை விபத்துகள் தீ விபத்துகள் நடைபெறும் எனவும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.