புரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனம் தேவை
சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். காரணம் கன்னி ராசி புதன் உச்சம் பெரும் ராசி. அந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் கன்னி ராசியில் சூரியனுடன், சுக்கிரன், புதன், கூடவே செவ்வாயும் கூட்டணி சேருகின்றனர். இந்த கிரகங்களின் கூட்டணியால் பல ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். புரட்டாசி பிறக்கும் போது மேஷத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், சுக்கிரன். சிம்மம் ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாதத்தின் முதல்நாளில் சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். நவராத்திரி பண்டிகை, மகாஹய பட்சம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.
புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. சிம்மம் ராசியில் இருக்கும் செவ்வாய் பகவான் புரட்டாசி 8ஆம் தேதி கன்னி ராசிக்கு நகர்கிறார். 12 ஆம் அதிபதி புதன் துலாம் ராசிக்கும், சுக்கிரன் 16ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்ந்து புதனுடன் கூட்டணி சேருகிறார். சனி பகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் இயங்கத்தொடங்குகிறார். மாத பிற்பகுதியில் ஏற்படும் இந்த கிரகங்களின் மாற்றம் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்களைத் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
பயணங்களில் கவனம்
புரட்டாசி மாத துவக்கத்தில் விரைய ஸ்தானத்தில் சூரியன் புதன், சுக்கிரன் இணைந்திருக்க முதல்வாரத்திலேயே செவ்வாய் பெயர்ச்சியாகி மூன்று கிரகங்களுடன் இணைகிறார். அப்போ விரைய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் பயணங்களில் கவனம் தேவை. காரணம் இந்த நேரத்தில் உடல் நல பாதிப்புகளை தருவார். நெருப்பு விசயங்கள், மின்சாதனங்களில் கவனம் தேவை. உறவினர்களிடம் சரியான பேச்சுவார்த்தை அவசியம். விரைய ஸ்தானத்தில் விரைய ஸ்தான அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பது விபரீத ராஜயோக அமைப்பை ஏற்படுத்துகிறார்.
காதல் மலரும் திருமணம் கைகூடும்
மாத பிற்பகுதியில் உங்க ராசிக்குள் வரும் புதன் பரிவர்த்தனை யோகம் பெறுகிறது. சுக்கிரன் நீசமடைந்தருக்கிறார். சில நாட்கள்தான். அப்புறம் உங்க ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். ராசியில் புதன் சுக்கிரன் இணைவதால் படிப்பில் சிறப்பாக இருக்கும். ஆட்சியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது காதல் மலரும் காலம், ஆனால் சிலருக்கு தடை ஏற்படும் காரணம் மூன்றாம் வீட்டில் சனி கேது பிரச்சினையை தருவார்.
வருமானம் அதிகம் கூடவே செலவு
சனி மூன்றாம் வீட்டில் கேது உடன் இருக்கிறார். வாக்கு ஸ்தானத்தில் குரு இருக்கிறார். வருமானம் அதிகம் வந்தாலும் அதிகம் கடனை கொடுப்பார். இந்த மாதம் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. செவ்வாய் சனி பார்வை இருப்பதால் வேலை மாற நினைக்க வேண்டாம். சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். முக்கியமான முடிவு செய்யும் போது கவனம் தேவை. திருமணத்திற்கு பார்க்கும் போது ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து முடிவு பண்ணுங்க. அவசரப்பட்டு முடிவுகள் எடுத்து விட்டு அவதிப்படாதீர்கள்.
சுப விரையங்கள்
குரு உங்க ராசியில் இருக்கிறார். அடுத்தமாதம் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. செவ்வாய் சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் புதிய வேலை கிடைக்கும். 12ஆம் வீட்டில் சுக்கிரன் 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பதால் இந்த மாதம் முழுவதும் விபரீத ராஜயோக அமைப்பை தருகிறார். உயர்கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். காரணம் புதன் 12ஆம் வீட்டில் இருக்கிறார். சுப விரையங்கள் அதிகம் நடக்கும். காரணம் விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். மறைந்த புதன் நிறைந்த கல்வியைத்தரும்.
பணப்பிரச்சினை
சனி மற்றும் கேது இரண்டாம் வீட்டில் இருப்பதால் தேவையில்லாமல் பேசாதீங்க. வம்பு வழக்குகள் அதிகமாகும். குடும்பத்தில் பிரிவினை வரும் காரணம் குடும்ப ஸ்தானத்தில் சனி. பணப்பிரச்சினை வரும். தடைகள் தடங்கல் வந்து கொண்டே இருக்கும். உடம்பில் பிரச்சினைகள் வரும். வேலையில் சில மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடக்கும். வீடு வாகன வசதிகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் தடைகளாகவே இருக்கும். பொறுமையாக இருந்தால் நன்மையாகவே இருக்கும். ஜென்ம குரு குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை சரி செய்வார். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். விருச்சிகத்திற்கு நல்ல காலம் நெருங்கி வருகிறது. கவலைப்படாம இருங்க.