எதிரி, நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - சிவ தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா?
தீராத நோயினாலும் கடன் பிரச்சனையாலும் அவதிப்படுகிறீர்களா ருண விமோசன பிரதோஷ தினமான இன்று மாலை சிவ ஆலயம் சென்று நந்தி, சிவபெருமானை தரிசனம் செய்து வாருங்கள் நோய், கடன் தொல்லை பாதிப்புகள் குறையும்.
மதுரை: செவ்வாய்கிழமை பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்வதால் மனிதனுக்கு வரும் ருணம், கடன் தொல்லை, எதிரி தொல்லைகள் நீங்கும். செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும். பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் இன்றைய தினம் மாலை பிரதோஷ காலத்தில் சிவ ஆலயம் சென்று சிவ பெருமானையும் நந்தியம்பெருமானையும் வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம் என ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் வருகின்றன. இன்று கிருஷ்ண பட்ச பிரதோஷம். தேய்பிறை பிரதோஷம். செவ்வாய்கிழமை பிரதோஷம் ருண விமோசன பிரதோஷமாக கடைபிடிக்கப்படுகிறது.
செவ்வாய் திசை நடப்பவர்கள்,செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ,விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம் சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்றைய தினம் சிவ ஆலயம் சென்று நந்தி, சிவன் தரிசனம் செய்யவேண்டும்.
உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். செவ்வாய்கிழமையன்று பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.
கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. லோன் வேண்டுமா? கிரெடிட் கார்டு வேண்டுமா என்று போனில் பேசி பேசியே பலரை கடனாளியாக்கி நடுத்தெருவிற்கு கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றனர். கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம்.
ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும்.
ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும். மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர்.
கேதுவின் அதிதேவதை விநாயகரையும், செவ்வாயின் அதிதேவதை முருகனையும் வணங்க கடன் பிரச்சினை தீரும். சிவ ஆலயங்களில் இன்று நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்று சிவபெருமானையும் நந்தியையும் வணங்க கடன் பிரச்சனை தீரும்.
பிரதோஷ நேரமான மாலை 4:30 மணி முதல் 6:30 மணிவரை, உலகில் உள்ள அத்தனை தேவதைகள், தெய்வங்களும், நேர்மறை எண்ணம் கொண்ட சக்திகள், சித்தர்கள் சிவ ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். அந்த நேரத்தில் நாம் கோயிலில் எந்த வேலையாவது செய்தால், அவர்களின் பார்வை நம் மேல் படும், நம் வாழ்வின் பிரச்சனைகளும் நீங்கும். அபிஷேகத்தில் பால், பன்னீர், இளநீர், வில்வ இலை வாங்கிக் கொடுக்கலாம்.
எந்த ராசி நட்சத்திரத்தை உடையவராக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷத்தன்று வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும்.