சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி அச்சம் வேண்டாம்
துலாம் ராசிக்காரர்களே... இதுநாள் வரை முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இருந்த சனிபகவான் இனி நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப்போகிறார். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம்.
Recommended Video
மதுரை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சனிபகவான் இதுவரை துலாம் ராசிக்கு 3ஆம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ஆம் இடத்தில் மகரம் ராசியில் 30 மாதங்கள் சஞ்சாரம் செய்வார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ அச்சமோ படத்தேவையில்லை. வேலை, கல்வி, திருமணம், வருமானம் ஆகியவை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும்.
நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், இந்த இடத்தில் அமரும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார், ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.
வேலையை காதலியுங்கள்
4ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்யுங்க. உங்க வேலையை காதலித்தால்தான் அந்த வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வேலையை விட வேண்டியிருக்கும்.
வெளிநாட்டு வாய்ப்பு
வேலைக்கு அடிக்கடி லீவு போடாதீங்க. அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்பட்டாலும் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார்.
வீடு வண்டி வாகனம்
நான்காம் இடம் தாய் ஸ்தானம் இந்த இடத்தில் சனி அமர்வதால் அம்மாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். எனவே அம்மாவை அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி உடல்நலத்தை கவனிக்கவும். சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.
கடன்கள் அதிகரிக்கும்
ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். சரியான, சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும். பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் பின்னர் நஷ்டத்தில் விட்டு விடும்.
தலையிட வேண்டாம்
எதிரிகள் அதிகமாக வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள் தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே பிரகாசிக்க முடியும். ஜெயிக்கவும் முடியும். புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள்.
உழைத்தால் வெற்றி
மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சோதனையான காலகட்டமாகும். உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருந்தால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களை பெற முடியும், விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும். விளையாட்டுகளில் கவனம் தேவை. கல்விக்கடன் கிடைப்பதில் இழுபறி ஏற்படும். தேவையற்ற நண்பர்களை வெட்டி விடுங்கள். சோம்பலை விரட்டி சுறுசுறுப்பாக இருங்க படிப்பில் ஜொலிக்கலாம்.
பெண்களுக்கு மதிப்பு
பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், பதவி உயர்வும் தேடி வரும். ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும். கணவன் மனைவி உறவு உற்சாகமாக அமையும். மகிழ்ச்சி நீடிக்கும். பேச்சில் இனிமை கூடும். காதல் திருமணத்தில் முடியும், சிலருக்கு தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய ஓய்வு எடுங்க. வயிறு பிரச்சினைகள் வராமல் இருக்க நேரத்திற்கு சாப்பிடுங்க.
சனிபகவானை சரணடையுங்கள்
அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். காலபைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.