ஏழரை சனியா? அஷ்டம சனியா? கண்ட சனியா? அர்தாஷ்டம சனியா? ஹனுமான் சாலிசா படிங்க!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையும் மூல நக்ஷத்திரமும் சேர்ந்த நாளை ஸ்ரீ அனுமத்ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். நாளை சனி பெயர்ச்சி இருக்கும் நிலையில் இன்று ஸ்ரீ ஹனுமத்ஜெயந்தி அமைந்திருப்பது உற்சாகம் அளிக்கிறது.
நீண்ட நாட்களாக சனி பெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கி வந்த சனைச்சரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்க படி கடந்த ஐப்பசி மாதம் 9ம் தேதி (26-10-2017) முதல் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியை அடைந்து செலுத்துகிறார் அங்கிருந்தபடி தனது சஞ்சாரத்தை தொடர்ந்து வருகிறார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கபடி வரும் மார்கழி மாதம் 4ம் தேதி (19-12-2017) அன்று விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து சனி பரிகாரஸ்தலங்களில் சனி பரிகார பூஜைகளுக்கு பிரும்மாண்டமான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர், எந்த பஞ்சாங்கமாக இருந்தால் என்னங்க! இந்த ஆண்டில் சனி மாறுவது நல்லதே நடக்கும் என நம்புவோம்.
ஆஞ்சனேயரும் சனிஸ்வரனும்:
சனீஸ்வரர், தெய்வங்களை ஆட்டிபடைக்க வேண்டிய காலம் வரும்போது அவர்களின் அனுமதி வாங்கியபிறகுதான் பிடிக்க வேண்டும் என்பது ஒரு விதி. அதுபோல ஒரு சமயம்,
ராம பக்த ஆஞ்சனேயரை பிடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதால், ஹனுமாரிடம் சென்ற சனி பகவான்,
"என் கட்டுப்பாட்டுக்குள் நீ சில காலம் இருக்க வேண்டியது உன் விதி. அதனால் நான் எப்போது வந்து என் கடமையை செய்ய வேண்டும்?" என அனுமதி கேட்டார். அதற்கு ஆஞ்சநேயர், "நல்லது. இப்போது நான் ஸ்ரீஇராமசந்திர மூர்த்திக்கு உதவியாக இருப்பதால், இந்த தருணத்தில் நீ என்னை பிடித்தால், இதனால் ஸ்ரீஇராமருக்கு என்னால் உதவ முடியாமல் ஆகிவிடும். அதனால் நான் அழைக்கும் போது நீ வந்து என்னை தாராளமாக பிடித்துக் கொள்." என்றார் அனுமன்.
தன் நலனுக்காக இல்லாமல் ஸ்ரீஇராமருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற சுயநலம் இல்லாத ஹனுமனின் நல்ல எண்ணத்திற்காக சனிபகவான், "அப்படியே ஆகட்டும். உன் அனுமதியோடு நான் உன்னை பிடிக்கிறேன். ஆனால் என் பொறுமைக்கும் எல்லை உண்டு. நீ என்னை அழைக்காமல் இருந்தால் உனக்கு கூடுதலாக பல இன்னல்களை கொடுப்பேன். என்னிடம் இருந்து சர்வேஸ்வரனே தப்பிக்க முடியாமல் சிக்கினார் என்பதை நீயும் அறிவாய். அதை மறக்க வேண்டாம்." என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்றார் சனி பகவான்.
இராம-இராவண யுத்தத்தில் நாகாஸ்திரத்தால் அடிபட்டு மூர்ச்சையாகிவிட்டார் லட்சுமணர். அவரை உயிர் பிழைக்க வைக்க சஞ்சீவி மூலிகை வேண்டும் என்று சொல்ல, அந்த மூலிகையை நான் எடுத்து வருகிறேன்." என சொல்லி புறப்பட்டார் ஹனுமன்.
சஞ்சீவி மூலிகை இருக்கும் மலைக்கு வந்த ஹனுமன், வந்த அவசரத்தில் சஞ்சீவி மூலிகை எப்படி இருக்கும்? எவ்வளவு தேவை? என்பதையெல்லாம் கேட்க மறந்தோமே என குழப்பம் அடைந்தார். அந்த மலையில் எண்ணற்ற பல மூலிகைகள் இருந்ததால் சஞ்சீவி மூலிகை எது என்று ஹனுமனால் அறிய முடியவில்லை. அதனால் அந்த மலையையே பெயர்த்து எடுத்து தன் உள்ளங்கையில் தாங்கி அங்கிருந்து புறப்படும் போது அவருக்கு சனிஸ்வர பகவானின் ஞாபகம் வந்தது.
உடனே சனி பகவானை அழைத்தார் ஹனுமன். ஹனுமனை இன்று பிடித்துவிடலாம் என்ற ஆவலில் வந்த சனி பகவானின் முதுகில் அந்த சஞ்சீவி மலையை தூக்கி வைத்தார்
ஹனுமன். இதை சற்றும் எதிர்பாராத சனி பகவான், சஞ்சீவி மலையை சுமந்து வர தயங்கினார். இதனால் தன் விஸ்வரூபத்தை காட்டினார் ஆஞ்சநேயர். சனிபகவான் கதி கலங்கி போனார். ஹனுமனின் கட்டளைக்கு பணிந்து, தன் முதுகில் மலையை சுமந்துக் கொண்டு வந்தார். சிறிது தூரம் வந்தவுடன் சனி பகவானால் அந்த மலையின் சுமை தாங்க முடியாமல் துவண்டார்.
துவண்ட நிலையில் சனீஸ்வரர் "வாயு புத்திரனே என்னை மன்னித்து விடு. சூரியனையே கலங்கடித்தவன் நீ. அவ்வளவு ஆற்றல் படைத்த உன்னை சாதாரணமாக நினைத்துவிட்டேன். ஆனால் இப்போது உன் ஆற்றலை நேரில் கண்டேன். இனி உன்னை நான் பிடிக்க மாட்டேன். அத்துடன் உன்னை வணங்கும் பக்தர்களுக்கும் நான் இன்னல் தர மாட்டேன். தயவு செய்து என் முதுகில் இருக்கும் இந்த மலையை இறக்கி என்னை விடுவித்து விடு." என்று ஆஞ்சநேயரிடம் கெஞ்சினார் சனி பகவான். சரி போனால் போகட்டும் என்று சனி பகவானின் மீது பரிதாபப்பட்டு, சனி பகவானின் முதுகில் இருந்து மலையை இறக்கி தன் உள்ளங்கையில் அந்த சஞ்சீவி மலையை தாங்கி அங்கிருந்து புயல் வேகத்தில் யுத்த களம் நோக்கி பறந்தார் வாயு புத்திரரான ஆஞ்சநேயர்.
இந்த சம்பவத்திற்கு பிறகுதான் ஆஞ்சநேயரை வணங்கினால் சனிபகவானின் இன்னல்கள் நமக்கு ஏற்படாது என்ற உண்மையை தெரிந்துக் கொண்டாம். ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, அஷ்டம சனி, போன்றவற்றால் பாதிப்பு அடைந்து வருகிறவர்கள், ஹனுமனை வணங்குங்கள். அத்துடன் சனி கிழமையில் ஆஞ்சனேயருக்கு வெண்ணை, வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி இதில் ஏதாவது ஒன்றை சமர்பித்து வணங்கினால் நிச்சயம் சனீஸ்வர பகவானால் எந்த இன்னலும் ஏற்படாது.
ஹனுமான் சாலிஸா:
புகழ்பெற்ற அனுமான் பக்தர் துளசிதாஸ் என்பவர் படைத்த கவிதை உருவாக்கத்தில் மிகவும் உத்தமமானது இந்த ஹனுமான் சாலீசா மந்திரம். இதைப் பாராயணம் செய்வதால் ஹனுமனின் ஆசீர்வாதம் கிடைத்து அனைத்து விதமான கவலைகளும் நீங்கிவிடும்.
சனி தேவனால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமான் சாலீசாவைப் பாராயணம் செய்ய வேண்டும். அனுமான் சாலீசா குறிப்பிட்ட நேரம் மற்றும் குறிப்பிட்ட முறையில் உச்சரிக்க வேண்டும். இதனை இரவு நேரங்களிலும் மற்றும் அதிகாலையிலும் படிக்கலாம். ஹனுமான் சாலீசாவை இரவில் படித்தால் இரவில் ஏற்படும் அனைத்து பயங்களும் போகும்.
மகத்துவம் நிறைந்த ஸ்ரீ ஹனுமார் ஜாதகம்:
ஸ்ரீ ஹனுமான் ஜாதகத்தில் மேஷ லக்னமாகி லக்னாதிபதி ஆட்சி பெற்றதால் சூரியனையும் பழம் என நினைத்து நெருங்கும் வேகத்தை பெற்றிருக்கிறார். திரிகோணங்களில் சூரியனும் குருவும் பரிவர்தனை பெற்று நின்று குரு சூரிய சந்திரர்களை பார்த்து குரு சந்திர யோகம் பெற்றதால் கல்வியிலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார். சுக்கிரன் நீசமாகி புதன் உச்சம் பெற்று ராகுவுடன் சேர்ந்து நின்றதால் சிறந்த கல்விமானாகவும் கலா ரசிகராகவும் விளங்கினார். சுக்கிரன் நீச பங்கம் பெற்று சந்திர கேந்திரத்தில் நின்று நீச பங்க ராஜ யோகம் அடைந்ததால் ப்ரம்மசாரியாக விளங்கிய ஹனுமன் பிற்காலத்தில் ஸ்வச்சலா என்ற பெண்ணை மணந்ததாக கூறுவர்
இரண்டாமதிபதி சுக்கிரன் நீசம் பெற்று மூன்றாமதிபதி உச்சம் பெற்று புதன் வீட்டில் சேர்க்கை பெற்று நீசபங்க ராஜ யோகம் பெற்று ராகுவுடன் கூடி நின்றதால் இசையிலும் மாமேதையாக திகழ்ந்து மார்கழிக்கு பெருமை சேர்த்தது பெருமையன்றோ!!!
கர்ம ஸ்தானத்தில் சனி நின்று ஆறாமிடத்தில் ராகு நின்றதால் இவருடைய சேவையை உலகறியும். இவரை ராம தாச மாருதி என்றும் போற்றுவார்கள். ராகு 6/8/12 வீடுகளில் 6ம் வீட்டில் நின்றும் ஆறாம் வீட்டதிபதி ராகுவிற்க்கு கேந்திர திரிகோணத்தில் நின்றதால் அதியோகமும் பெற்று சிறந்து விளங்கினார். இத்தகைய சிறப்புகள் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியை அவருடைய ஜென்ம நக்ஷத்திர தினமான இன்று வணங்கி சனி தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் சகல வலமும் பெற்று வாழ்வோமாக!