திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆலயம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
தேவர்களை ரட்சிக்க இறைவன் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்த தலமான திருமோகூர் காளமேகப்பெருமாள் ஆலயத்தைப் பற்றி நலம் தரும் ஆலயங்கள் பகுதியில் இன்று நாம் தெரிந்து கொள்வோம்.
மதுரையை அடுத்த ஒத்தக்கடை அருகே அமைந்துள்ள திருமோகூரில் எழுந்தருளியுள்ளார் காளமேகப் பெருமாள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர்.

வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர். மந்திர எழுத்துக்களோடு காணப்படும் சக்கரத்தாழ்வார் இங்கு மட்டுமே இருக்கிறார்.
திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்:
சக்கரத்தாழ்வார் சுதர்சனர் அம்சம் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார்.
மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது இங்கு மட்டுமே.
சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது.
மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம்.
ஸ்தல பெருமைகள்:
நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று.
இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர். வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்து சென்றவர்.
பெருமாள் மோகினி அவதாரம் எடுத்த தலம். மோகினி ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்தல புராணம்:
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர். அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே, பெருமாளும் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார். பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இவ்வூர் திருமோனவூர் என்றிருந்து பின்பு திருமோகூர் என்று அழைக்கப்படுகிறது.

பாடல் பெற்ற தலம்
நம்மாழ்வார் தமது முப்பத்தி இரண்டாவது வயதில் இருந்த இடத்தில் இருந்தே நூற்றியெட்டு திருப்பதிகளில் முப்பத்தாறு தலப் பெருமாளைப் பாடுகின்றார். அவர்களில் இத்தலத்து பெருமாள் மட்டுமே நம்மாழ்வரை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார். எனவே இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.
ஆலயத்தை அடையும் வழி:
மதுரையிலிருந்து பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் இருக்கின்றன.
தல பெருமை:
மூலவர்: காளமேகப் பெருமாள்
பெருமை: திவ்ய தேசம்
உற்சவர்: ஸ்ரீஆப்தன்
தாயார்: மோகனவள்ளி
தலவிருட்சம்: வில்வம்
தீர்த்தம்: ஷீராப்தி
விமானம்: கேடகி
புராணப் பெயர்: மோகனபுரம்
சிறப்பம்சம்: சக்கரத்தாழ்வார்












Click it and Unblock the Notifications