தைப்பூச தெப்பத்திருவிழா - பழனியில் தெப்பத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலித்த முருகன்
தெப்பத்திருவிழா உடன் பழனியில் தைப்பூச திருவிழா நிறைவடைந்தது. வள்ளி தெய்வானை சமேதராக தெப்பத்தில் வலம் வந்த முத்துக்குமாரசாமியை பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
பழனி / சென்னை: தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக பக்தர்களால் போற்றப்படும் பழனியில் பத்து நாட்கள் நடைபெற்ற தைப்பூச திருவிழாவின் இறுதியாக முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை தெப்பத் தேரில் சமேதராக எழுந்தருளி தெப்பத்தில் மிதந்தபடி வலம் வந்து அருள்பாலித்தனர். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். தெப்பத்திருவிழா உடன் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், கொடியிறக்கப்பட்டு தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. அதிலும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி, முருக பெருமானுக்குரிய வழிபாட்டில் முக்கிய நாளாக இருக்கிறது. தை மாதம் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச திருநாள் கொண்டாடப்படுவதற்கு தமிழர்களின் வானியல் அறிவும் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. பூசம் என்பது வானில் இருக்கும் ஒரு நட்சத்திர கூட்டம். தைப்பூசத்தன்று சூரியன் மகர ராசியிலும் சந்திரன் பூசநட்சத்திரத்தில் கடக ராசியில் வடக்கும் சஞ்சரிக்கும். இந்த நாளை சிறப்பான நாளாக உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் இந்த தைப்பூச திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பலவிதமான நேர்த்திக்கடன்களை பய பக்தியுடன் செலுத்தினர்.
முருகனுக்கு தைப்பூசம்
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளி ஆடு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், புதுச்சேரி சப்பரம், தங்கக் குதிரை, தங்க மயில் போன்ற வாகனங்களில் வீதி உலா எழுந்தருளினாா்.
காவடி நேர்த்திக்கடன்
தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பக்தி பரவசத்துடன் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு குவிந்து வருகின்றனர். பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, மச்ச காவடி என பல வகையான காவடிகளை எடுத்து மேல தாளத்துடன் முருகனை தரிசித்து நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.
தைப்பூச தேரோட்டம்
கடந்த 7 ஆம் தேதி திருக்கல்யாணமும் வெள்ளித்தேரோட்டமும் நடைபெற்றது. 8 ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்கிழமையன்று பெரியநாயகியம்மன் கோயில் அருகிலுள்ள ஆயிரவாழ் செட்டிகள் தெப்பக்குளத்தில் தெப்பத் தோ் உலா நடைபெற்றது.
முத்துக்குமாரசாமி சிறப்பு அபிஷேகம்
தெப்பத்திருவிழாவையொட்டி தெப்பத்தின் நடுவிலுள்ள கல் மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் போன்ற பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. நகைகள், பட்டாடைகள், வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
கோலாகல கொண்டாட்டம்
அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி எழுந்தருளி உலா வந்தாா். தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தது. அப்போது வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பத்தேர் நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, தோளுக்கினியாள் வாகனத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது
லட்சக்கணக்கான பக்தர்கள்
தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். நிறைவு நாளான நேற்று அக்கம் பக்கத்து ஊர்களைச்சேர்ந்த கிராம மக்கள் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் வந்து சண்முகா நதியில் நீராடி முருகப்பெருமானை வணங்கினார். லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால் பழனியில் சுவாமி தரிசனத்திற்காக பல மணிநேரம் காத்திருந்தனர்.
மயிலையில் தைப்பூசம்
கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பக்குளத்தின் 4 திசைகளிலும் பக்தர்கள் அமர்ந்து தெப்பத்தில் சாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது.
மாட வீதிகளில் கபாலீஸ்வரர்
மாலை 6 மணியளவில் கோயிலில் இருந்து கபாலீஸ்வரர் புறப்பாடு நடைபெற்றது. மாடவீதிகள் வழியாக வலம் வந்த கபாலீஸ்வரர் கற்பகாம்பாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீதியின் இருபுறமும் நின்று தரிசனம் செய்தனர். மாலை 6.40 மணியளவில் சுவாமி அம்பாளுடன் தெப்பக் குளத்துக்கு வந்தடைந்தார்.
பக்தர்கள் தரிசனம்
முதல் நாளான்று தெப்பம் 5 சுற்றுகள் குளத்தில் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தின் படிக்கட்டிகளில் அமர்ந்து பக்தி பரவசத்துடன் தெப்பத்தை பார்த்து மகிழ்ந்தனர். பெரும்பாலானோர் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனர். 2வது நாளான்று குளத்தில் 7 சுற்றுகளும், 3வது நாளன்று 9 சுற்றுகளும் தெப்பம் வலம் வந்தது. இதனையடுத்து சிங்காரவேலர் புறப்பாடும் நடைபெற்றது. தைப்பூச தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சைதை காரணீஸ்வரர்
இதேபோல் சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காரணீசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்பாள் தெப்பத்தில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.