சனிதோஷம் போக்கும் கால பைரவர்: தேய்பிறை அஷ்டமியில் வழிபட சங்கடங்கள் தீரும்
சனியினால் ஏற்படும் சங்கடங்கள் தீரவும், தோஷங்கள் நீங்கவும் சனிபகவானின் குருவான பைரவரை வணங்கலாம். ஞாயிறன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் அஷ்ட பைரவ யாகம் நடைபெறுகிறது.
வேலூர்: சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வருகிற 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை தேய்பிறை அஷ்டமி யாகத்துடன் அஷ்டபைரவர் பூஜை நடைபெற உள்ளது.
பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களின் பாபத்தை நீக்கி அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

காலபைரவர்
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும். பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.
அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

பைரவருக்கு பஞ்சதீப எண்ணெய்
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய்.
அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும். இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத பிரச்சனையும் தீரும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

மிளகு தீபம்
எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது. சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான். தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது. சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.

சனி தோஷம் நீங்கும்
ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி. அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன்பின் வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனி தருகிறார். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்டமி யாகத்துடன் அஷ்டபைரவர் பூஜை நடைபெற உள்ளது. சொர்ண கால பைரவர் ஹோமத்துடன் அஷ்ட பைரவர் பூஜை நடைபெற உள்ளது.

துன்பங்கள் நீங்கும்
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.

கடன் தொல்லைகள் நீங்கும்
பைரவர் வழிபாடு செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும் இன்பங்கள் எல்லாம் தேடி வரும்.
இந்த யாகங்களில் பக்தர்களின் பலவிதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடையும். வர வேண்டிய பணம் வந்து சேரவும், தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை அமைய வேண்டியும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடவும், வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும், சனியின் தாக்கம் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி தீரவும், வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும் பைரவரை வணங்கலாம்.

சத்ரு பயம் தீரும்
பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும், நமது கடுமையான கர்மவினைகள் தீரவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், வழக்குகளில் வெற்றி பெறவும், வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும், வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் ஸ்ரீ மஹாபைரவர், சொர்ண பைரவர் யாகத்துடன் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் போன்ற அஷ்ட பைரவர்களுக்கும், மஹாபைரவர், சுவர்ண ஆகர்ஷண பைரவருக்கும் மகா அபிஷேகம், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து கூஷ்மாண்ட தீபம் ஏற்றி செவ்வரளி பூக்களால் அர்ச்சனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

சொர்ண ஆகார்ஷண பைரவர்
வாராக்கடன் மூலம் ஏற்ப்படும் கஷ்டம், பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர அல்லது உயர் பதவியில் அமர இந்த சொர்ண ஆகார்ஷண பைரவர் வழிபாடு கண்டிப்பாய் உதவிடும். பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் நடக்கும் போது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் உண்டாகும்தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபடுவதும் அல்லது அன்றைய தினம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதும் நன்மையை தரும்.












Click it and Unblock the Notifications