ஆடி 3வது வெள்ளி இன்று வரலட்சுமி விரதம் கோலாகலம் - வீடுகளில் விழாக்கோலம்
ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் தங்களின் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும் செல்வ வளம் பெருகவும் நோன்பு கயிறு கட்டி விரதத்தை தொடங்கினர்.
சென்னை: திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் பௌர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமி அமைவதைப் பொறுத்து ஆடியிலோ ஆவணியிலோ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து நோன்பு கயிறு கட்டி விரதத்தை தொடங்கினர்.
வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் தங்களின் வீடுகளில் நேற்றே பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து தயார் படுத்தினர். பூஜை அறையில் இலை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை தயார் செய்து அம்மனை வரவேற்றனர்.

லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும். புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ளது.
வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று நம் வீட்டிற்கு வரும் அன்னை லட்சுமி தேவி நிரந்தரமாக நம் வீட்டிலேயே தங்கி செல்வ வளம் பெருகச் செய்ய வேண்டும் என அனைவரும் வேண்டிக்கொள்வோம். முறைப்படி பூஜை செய்ய முடியாதவர்கள் வீட்டில் மகாலட்சுமி படத்தின் முன்பு நெய் தீபம் ஏற்றி வைத்து பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கல் செய்து வைத்து வழிபடலாம்.












Click it and Unblock the Notifications