சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு முதல் மீனம் வரை யாருக்கு பலன்கள் பரிகாரங்கள்
சனிப்பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் வரை நான்கு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மதுரை: வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம்,மீனம் நான்கு ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு, பலன் என்ன, பரிகாரம் என்ன செய்வது என்று பார்க்கலாம்.
சனிபகவான் நீதிமான். சனியினால் சங்கடம் ஏற்படுமோ என்று பலரும் பயப்படுவார்கள். சனிபகவான் எல்லோருக்குமே தண்டனை தர மாட்டார். தவறு செய்பவர்களை மட்டுமே தண்டனை கொடுப்பார். பலருக்கும் படிப்பினைகளை கொடுப்பார் சனிபகவான்.
சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.
சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்களின் நிலை, தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பலன்களைப் பார்த்து பயப்பட தேவையில்லை.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - யாருக்கு தரிசனம் கிடைக்கும்
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனி என்பதால் பட்ட காலிலே படும் என்பதால் அதிக கவனம் தேவை. தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் ஜாக்கிரதையாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து பேசவும். பாத சனி நடக்கும்போது கவனம் தேவை. பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது,ஓடுவது,வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை. சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் வரும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்று போரட வேண்டி வரும். சனிபகவான் 3ஆம் பார்வையாக உங்கள் ராசியின் 4ஆம் இடத்தை பார்ப்பதால் உயர் கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும். இதுவரை மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வு இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள் சந்தோஷம் அதிகரிக்கும்.
மகரம்
ஜென்ம சனி என்றாலே பாதிப்பு வருமே என்று மகரம் ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம். சனிபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து கொண்டு ராசிக்கு மூன்றாம் இடம், ஏழாம் இடம், பத்தாம் இடத்தைபார்வையிடுவதால் உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைபட்டு வந்த திருமண சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் ஊதிய உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலையும் கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் சக ஊழியர்களின் நட்பும் ஒத்துழைப்பும் கிட்டும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் கிட்டும். சிறு தொழில்கள் சிக்கலின்றி நடைபெறும்.
பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கும் சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியம் கெடும். எனவே கவனமாக செயல்படுங்கள். உடலுக்கும்,மனதுக்கும்,உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிருங்கள். மன சஞ்சலங்கள், குழப்பங்கள் குறைந்து தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். மாணவர்கள் ஞாபகசக்தியை அதிகரிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நன்கு மதிப்பெண் பெற முடியும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருங்க நல்லதே நடக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்களுக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெண்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். கணவரிடரும், குடும்பத்தினரிடமும் உற்சாகமாக நேரத்தை செலவிடுங்கள். 30 மாதத்தில் ஜென்மசனியை சிக்கலின்றி கடந்து விடலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் சனிபகவானை தரிசனை செய்யுங்கள் பாதிப்புகள் குறையும்.
கும்பம்
சனிபகவானும் உங்களுக்கு ராசி அதிபதி. 12வது இடம் அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார். சனி பகவான் 12ல் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். விரைய ஸ்தானத்தில் அமர்ந்து குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாக ஏற்படும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும். கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் நன்மை நடைபெறும்.
மீனம்
உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி சஞ்சரிப்பதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் நன்மை அதிகரிக்கும். இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும். இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவானால் உங்களுக்கு வருமானம் பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். லாப சனியால் தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பதவி உயர்வு கிடைக்கும்.
கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். தான தர்மம் செய்யுங்கள். இல்லத்தரசிகளுக்கு உறவுகளிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். 7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். குழந்தைகளினால் நன்மை நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உடலில் சளித் தொல்லை இல்லாமல் கவனித்தல் நலம். நேரத்திற்கு சாப்பிடுங்க கவனம் தேவை. உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய சனிப்பெயர்ச்சி என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தையும் சனி வணங்குவார். உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் கவனமாக சென்று வருதல் வேண்டும். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய பாதிப்புகள் குறைந்து மேலும் நன்மைகள் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.