Sani Vakra Nivarthi: வக்ரசனியிலும் அதிர்ஷ்டம் பெறும் மேஷ ராசி.. இந்த விஷயத்தில் ரொம்ப கவனம்
Sani Vakra Nivarthi 2025: மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். சனி வக்ர நிவர்த்தியான இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கார்த்திகை மாதம் 12 ஆம் தேதியான நேற்று வெள்ளிக்கிழமை மீன ராசியில் இருந்து மீன ராசியிலேயே வக்ரம் நிவர்த்தி அடைந்துள்ளார். 330 டிகிரியில் மீன ராசியில் குருவின் நட்சத்திரத்தில் சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிவர்த்தியில் இருந்து நிவர்த்தி அடைந்துள்ளார்.

தொழில் காரகன், தொழிலுக்கு அதிபதி, கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நவக்கிரகத்திலேயே நேர்மையான பகவான் சனி. இந்த வக்ர நிவர்த்தி காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான மாற்றங்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியாதிபதி செவ்வாய் பகவான். மேஷ ராசிக்கு சனி பகவான் 12 ஆம் இடத்தில் விரயச் சனியாக நிற்கிறார். உங்களுக்கு இப்போது விரய சனி நடந்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் சனி வக்ர நிவர்த்தி அடைந்து முன்னோக்கிப் போகிறார். இந்த ஏழரை சனியில் விரய சனி மீண்டும் தொடங்குவதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பொதுவாக தலை சார்ந்த பிரச்சனைகளே அதிகம் ஏற்படும். ஒற்றை தலைவலி, தலைவலி, தலை பாரம், நீர் கோர்த்திருப்பது போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. விரய சனி வரும்போது தலை சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் உரிய மருத்துவம் பெற்றுக் கொள்வது நல்லது. மாமியார், முறைப்பெண், முறைபையன், அண்ணன், அக்கா, மறுதாரம் போன்றோர் மிகுந்த கவனமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
கையெழுத்தில் கவனம்
ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போடக் கூடாது. பண விஷயத்தில் மற்றவர்களுக்காக நின்றால் பாதிப்பைச் சந்திக்க நேரிடும். பணம் சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில் கடன் பட்டாவது திருமணம் செய்து கொள்வது, வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, வீட்டை புனரமைப்பது போன்றை நன்மை பயக்கும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சுபவிரயம்
சுப விரயங்களை செய்வது நன்மை பயக்கும். திருநள்ளாறு சென்று வருவது உங்களுக்கு திருப்பத்தை ஏற்படுத்தும். இருப்பதிலே மோசமானது என்றால் விரய சனி. மருத்துவ செலவு, அறுவை சிகிச்சை, உடல் உபாதை போன்றவை ஏற்படும் காலகட்டம். ஏதாவது ஒரு விரயத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதனால், திருநள்ளாறு சென்று கருப்பு துண்டு கட்டி குளித்துவிட்டு வருவது நல்லது.
பரிகாரம்
வீட்டிற்கு வந்த பின்னர் எள் தீபம் ஏற்றுவது, கருப்பு எள் சோறு கலந்து காகத்திற்கு வைப்பது, நவக்கிரகத்தை வழிபாடு செய்வது, பறவைகளுக்கு உணவளிப்பது, தானம் அளிப்பது உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். அசையா சொத்துக்களில் முதலீடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பொறுமை அவசியம்
தொழில் ரீதியான பிரச்சனை, ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை, பணத் தடை போன்றவை ஏற்படும் காலகட்டம். நிம்மதி குறையும். ஏதாவது ஒன்றை பறிகொடுத்தது போல இருக்கும். சனி வக்ர நிவர்த்தி காலகட்டத்தில் உங்களுக்குப் பொறுமை மட்டுமே கைகொடுக்கும். கூட்டுத் தொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது. கையில் இருக்கும் இருப்பை வைத்து செலவு செய்வது நல்லது. ஆடம்பரத்தை தவிர்த்து அத்தியாவசியத்தை செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
விரய சனி காலகட்டத்தில் சுபச் செலவுகள், சுப நிகழ்ச்சிகளை செய்வது நல்லது. புத்திர பாக்கிய தடை, திருமணத் தடை நீங்கும். தொழில் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். வெளிநாடு, வெளி பயணங்களை மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். தன்னம்பிக்கையோடு போராடுவது உங்களுக்கு வெற்றியைத் தரும். முருகரை வழிபாடு செய்வது உங்களுக்கு மனபாரத்தைப் போக்கும்.












Click it and Unblock the Notifications