குட்டிச்சுக்கிரன் குடும்பத்திற்கு ஆகாதா? 20 வருட சுக்கிர திசையில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்?
ஒருவர் திடீரென கோடீஸ்வரராகி செல்வத்திற்கு அதிபதியாக மாறினால் அவருக்கு என்ன சுக்கிர தசை அடிக்கிறது என்று சொல்வார்கள்.
சென்னை: சுக்கிரன் சுகாதிபதி. சுக்கிரதிசை சிலருக்கு அள்ளிக்கொடுக்கும். சிலருக்கு சுமாரான பலன்களை மட்டுமே தரும். சுக்கிரதசை நன்றாக இருந்தால் சுமாரான நிலையில் இருக்கும் ஒருவர் இருபது ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாகும் ராஜயோகத்தை பெறுவார். குழந்தை பருவத்திலேயே சிலர் சுக்கிரதிசையை கடந்து விடுவார்கள். அது பலரையும் பாடாய் படுத்தி விடும். குட்டிச்சுக்கிரன் குடும்பத்தை கெடுக்குமா? சுக்கிரன் யாருக்கு அள்ளிக்கொடுப்பார் என்று பார்க்கலாம்.
சுக்கிரதசை மொத்தம் 20 ஆண்டுகள். பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இரண்டாவது திசையாக சுக்கிர திசை வரும் இதனால் அவர்களுக்கும் அவர்கள் பிறந்த குடும்பத்துக்கு பாதிப்பு வரும் என்பது பலரது கருத்து.
சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே சுக்கிரதிசை காலத்தில் நற்பலன்களை பெற முடியும். சுக்கிரன் பலம் பெற்றிருந்து நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்ற யாவும் அமையும்.
சுக்கிரன் களத்திரகாரகன், காதல் நாயகன், சுகங்களின் அதிபதி. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் அனைத்து சுகங்களும் தானாக வந்து சேரும். பண வரவுகளுக்கும் பஞ்சாமில்லாமல் இருக்கும். வருமானம் அதிகமாகி கடன்கள் யாவும் நிவர்த்தி யாகும். சுக்கிரன் சரியில்லாவிட்டால் மணவாழ்க்கையில் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று பாட வேண்டியிருக்கும்.
சுக்கிர திசை யாருக்கு நல்லது
சுக்கிரன் பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால், நல்ல ஆரோக்கியம், சுகவாழ்வு, சத்தான உணவுகளை சாப்பிடும் அமைப்பு கொடுக்கும். அதுவே சுக்கிரன் பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அடிக்கடி உடல் நிலை பாதிப்பு பெற்றோருக்கு பாதிப்பு உண்டாகும். சுக்கிரன் பலமாக இருந்து இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை அழகான உடலமைப்பு மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் அமையும். சுக்கிரன் பலமிழந்து இளமை பருவத்தில் நடைபெற்றால் ரகசிய உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்களால் ஆரோக்கிய பாதிப்பு குடும்பத்தில் பொருளாதார இடையூறுகள் உண்டாகும்.
சுக்கிரன் பலமாக இருந்து மத்திம வயதில் திசை நடைபெற்றால் சுகவாழ்வு சொகுசுவாழ்வு, பெண்களால் அனுகூலம், வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். பெண்களால் அனுகூலம், மணவாழ்வில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்து மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்பு, பெண்களால் அவப்பெயர், வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும்.
சுக்கிரன் பலமாக இருந்து முதுமை பருவத்தில் நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள், தாராள தனக்சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற யாவும் அமையும். சுக்கிரன் பலமிழந்து முதுமை பருவத்தில் நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, பொருளாதார தடை, சர்க்கரை நோய்கள், ரகசிய நோய்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார்.
யாருக்கு தோஷம்
சுக்கிரன் ஒவ்வொரு லக்னத்திற்கும் என்ன பலன்களைத் தருவார் என்று பார்ப்போமேயானால் மேஷ லக்னத்தவருக்கு குடும்பம் மற்றும் களத்திர வீடுகள் எனப்படும் இரண்டு ஏழுக்குடையவரான சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண பலம் அடைவதன் மூலம் இந்த யோகம் உண்டாகும்.
சுக்கிரன் ஒரு இயற்கைச் சுபர் என்பதால் சுப கிரகங்கள் கேந்திரத்தில் இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகும் என்பதன் அடிப்படையில் இந்த இடத்தில் சுக்கிரன் தனித்திருப்பது சிறப்பல்ல. மேஷத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் தனித்திருப்பதை விட வேறு கிரகங்களுடன் இணைந்திருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை குறைத்து நன்மைகளை அதிகப் படுத்தும். அதேநேரத்தில் ஏழில் இருக்கும் சுக்கிரன் லக்னத்தைப் பார்ப்பார் என்பதால் ஒரு சுப கிரகம் லக்னத்தைப் பார்ப்பது சிறப்பான நிலை.
யாருக்கு யோகம்
ரிஷபத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதியாகி, லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தைத் தருவார். இந்த அமைப்பு ரிஷப லக்னத்திற்கு மிகவும் சிறப்பான ஒரு நிலையாகும். முப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு சுக்கிர தசை வரும் போது நல்ல வீடு, உயர்தர வாகனம் அமையும், பெண்களால் லாபம் நடக்கும். மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் பத்தாம் வீட்டில் உச்சமாகி அவரது தசையில் சிறந்த யோகங்களைத் தருவார். இங்கிருந்து தசை நடத்தும் சுக்கிரனால் ஜாதகருக்கு இளமையிலேயே அனைத்துப் பாக்கியங்களும் கிடைக்கும்.
கடக, சிம்ம லக்னங்களுக்கு நல்ல நிலைகளில் இருந்தாலும் சுக்கிரன் மனப்பூர்வமாக நன்மைகளைச் செய்வது இல்லை. சுக்கிரன் இவ்விரண்டு லக்னங்களின் அதிபதிகளான சூரிய, சந்திரர்களை தனது பகைவர்களாக கருதுவதும், கடகத்திற்கு நான்காவது கேந்திரத்திலும், சிம்மத்திற்கு பத்தாவது கேந்திரத்திலும் வலுப் பெற்று கேந்திராதிபத்திய தோஷத்தைத் பெறுவதுமே இதன் காரணம். கடகத்திற்கு அவர் பாதகாதிபதியாக இருந்தாலும், தனது கேந்திர வீட்டிற்கு எட்டாமிடமான பதினொன்றாம் வீட்டில் லக்ன யோகக் கிரகங்களுடன் அமர்வது நன்மைகளைத் தரும் .
அழகும் அறிவும் யாருக்கு கிடைக்கும்
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல. ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும். சுக்கிரன் மூன்றாம் வீட்டில் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும். சுக்கிரன் நான்காம் வீட்டில் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு நான்காம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.
சொத்து சுகம் சுகமான வாழ்வு யாருக்கு அமையும்
சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண்களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும். சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும். சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.
வெளிநாடு செல்லும் யோகம்
சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும். சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும். சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.
பாதிப்பு குறைய பரிகாரம் என்ன?
சுக்கிரனுக்கு மட்டும் பனிரெண்டாமிடம் நல்ல இடம் என்பதற்கு காரணம் என்னவெனில், கால புருஷனாக உருவகப்படுத்தப்படும் நமது ராசிச் சக்கரத்தின் படுக்கையறை ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவதுதான், அதேபோல தன்னுடைய லக்னமான துலாமிற்கு ஆறில் அவர் உச்சம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. தனது நெருங்கிய நண்பரின் வீட்டில் நீசம் எனும் வலுக் குறைவை அடைந்து, ஜென்ம விரோதியின் வீட்டில் உச்சம் எனும் அதிக வலுவை அடையும் ஒரே கிரகமும் சுக்கிரன்தான். இப்போது சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். சுக்கிர திசை நடக்கும் காலத்தில் வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு விரதம் இருக்கலாம். மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது நன்மை தரும். மொச்சை பயிறு, தாலி கயிறு மஞ்சள் குங்குமம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். விரலில் வைரக்கல் மோதிரம் அணியலாம். கும்பகோணம் அருகே கஞ்சனூரில் சுக்கிரனுக்கு பரிகார தலம் உள்ளது. அங்கு சென்று பரிகாரம் செய்யலாம். ஸ்ரீரங்கம், மாங்காடு, மயிலாப்பூரில் வெள்ளீஸ்வரர் ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.