"சுழலுது சாட்டை".. விதிமுறை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள்.. களமிறங்கிய டீம்.. சபாஷ்
புதுச்சேரி : விதிமுறை மீறி மாணவர்களை ஏற்றிச்செல்லும், பள்ளி ஆட்டோக்களை கண்காணிப்பதற்காகவே சிறப்பு குழு ஒன்றினை புதுச்சேரி அரசு அமைத்துள்ளது. என்ன காரணம்?
புஸ்ஸி வீதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்த ஆட்டோவும், எதிரே வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பள்ளிச் சிறுமிகள் 8 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ் என அனைவரும் காயமடைந்தனர்.
ஆட்டோவின் முன்பகுதி மொத்தமாக அப்பளம்போல் நொறுங்கியது. ஆனால், அந்த பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.. அவர் பெயர் அன்பரசன்.. விழுப்புரத்தை சேர்ந்தவர்.. 39 வயதாகிறது..

குற்றவாளிகள்: அதேபோல, ஆட்டோ டிரைவர் விக்னேஷ் ஆகிய 2 பேரையுமே குற்றவாளியாக இந்த வழக்கில் போலீசார் சேர்த்தனர். ஆட்டோக்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிராபிக் எஸ்பி மாறன் கடுமையான எச்சரிக்கையையும் பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி போக்குவரத்து துறை கமிஷனர் சிவக்குமார், திடீரென ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்.. அந்த சுற்றறிக்கையில், சில விதிமுறைகளையும் தெரிவித்துள்ளார்.. அத்துடன் கல்வித்துறை இயக்குனருக்கும் சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.
கண்டிப்பு: அந்த அறிக்கையில், "பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் 5 நபர்களுக்குமேல் இருக்கக் கூடாது. கண்காணித்து முறைப்படுத்த ஆர்டிஓ, போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் இதுபற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் தங்களது குழந்தைகளை பெற்றோர் அனுப்பாதபடி, பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் கல்வித்துறையானது அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிக்கையின்படி, போலீசார், புதுச்சேரி முழுவதும் தீவிர கண்காணிப்பில் இறங்கினர்.
வாகன சோதனை: அந்தவகையில், புதுச்சேரி அண்ணா சிலை அருகே, நேற்று காலை 7 முதல் 9 மணி வரையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, அந்தவழியாக பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வரும் அனைத்து ஆட்டோக்களையுமே தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.. அப்போது பெரும்பாலான ஆட்டோக்களில் 6, 7, 8 பேர் என அதிக மாணவர்களை ஏற்றிவந்தது கண்டறியப்பட்டது.
ஒரு ஆட்டோவில் 5 நபர்கள் வரை மட்டுமே அனுமதி என்பதால், இனிமேல் 5 பேருக்குமேல் மாணவர்களை ஏற்ற கூடாது என்றும், அதற்கு மேல் ஆட்டோவில் ஏற்றியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.. அதேபோல, சம்பந்தப்பட்ட ஆட்டோக்களின் வாகன நம்பரையும் போலீசார் குறித்து வைத்துக் கொண்டார்கள்..
கலக்கத்தில் வாகன ஓட்டிகள்: அதுமட்டுமல்ல, இந்த டிரைவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் குழந்தைகளின் பெற்றோரை, அடுத்தமுறை வரவழைத்து அறிவுரை வழங்கவும், வண்டியை பறிமுதல் செய்யவும் டிராபிக் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இனிவரும் நாட்களில் பள்ளி ஆட்டோக்களை போலீசாரும், வருவாய்த்துறையினரும் போக்குவரத்து துறையுடன் இணைந்து தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள போகிறார்களாம். இதனால் பள்ளி ஆட்டோ டிரைவர்கள், டூரிஸ்ட் வேன் டிரைவர்கள், உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதுபற்றி போக்குவரத்து கமிஷனர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில் முறையான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்..
கொக்கிகள்: முக்கியமாக ஸ்கூல் பைகளை வைப்பதற்கு கொக்கிகள் வாகனங்களில் இருக்க வேண்டும்.. 2 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்துக்கு காரணம், அதிக மாணவர்களை ஏற்றிச்சென்துதான்.. அதனால்தான், வண்டியை டிரைவரால் உடனே திருப்ப முடியவில்லை.. அதனால்தான், வரும் நாட்களில் பள்ளி ஆட்டோக்களை போலீசாரும், வருவாய்த் துறையினரும் போக்குவரத்து துறையுடன் இணைந்து தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்கள்" என்றார்.
சில மாதங்களுக்கு முன்புகூட, மதுரை ஹைகோர்ட், பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் குறித்த கேள்வியை எழுப்பியிருந்தது..
கேள்வி: "பள்ளி வாகனங்களுக்கு என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளது.. ஆனால் ஆட்டோ, ரிக்சாக்களுக்கு என்ன விதிமுறை உள்ளது? அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications