வில் அம்பு டிசைன்.. வடசென்னையில் வரும் ராட்சச பாலம்.. ₹226.55 கோடி.. மொத்த பயணமே மாறப்போகிறது
சென்னை: சென்னையின் தி நகர் பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில், வட சென்னைக்கும் விரைவில் புதிய மேம்பாலம் ஒன்று அமையவுள்ளது. தொண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களுக்கு (வார்டுகள் 45 மற்றும் 71) உட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையின் குறுக்கே இந்த மேம்பாலம் ₹226.55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் 678 மீட்டர் நீளமும், 15.2 மீட்டர் அகலமும் கொண்டது. இது நான்கு வழித்தடங்கள் கொண்ட இருவழிச் சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில், 58 மீட்டர் நீளத்திற்கான பகுதி, ரயில்வே தடத்தில் வில் அம்பு வடிவமைப்பு (bowstring design) முறையில் கட்டப்பட்டுள்ளது.

மேயர் ப்ரியா ஆய்வு
சென்னை மாநகர மேயர் ஆர். பிரியா, நேற்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதில் மேம்பாலம் மற்றும் விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகள், குளங்களை ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் கால்வாய் மேம்பாட்டுத் திட்டங்கள் அடங்கும்.
மேயர் பிரியா மற்றும் ஆணையர் ஜே. குமரகுருபரன் ஆகியோர் கணேசபுரம் சுரங்கப்பாதையின் மீது கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர். இந்த மேம்பாலம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.226.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நான்கு வழி மேம்பாலத்தில், ரயில்வே பாதைக்கு மேல் 58 மீட்டர் நீளத்திற்கு வில் வடிவ இணைப்புப் பாலமும் அமைக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேம்பாலப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. மேலும் மேயர் பிரியா, கூட்ஸ் ஷெட் சாலையில் உள்ள ரயில்வே குளத்தின் சீரமைப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார். இந்தக் குளம் முதலில் 9,240 சதுர மீட்டர் பரப்பளவையும், 27,720 கன மீட்டர் நீர்த் தேக்கும் திறனையும் கொண்டிருந்தது.
தற்போது, குளம் 29,790 சதுர மீட்டர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 89,370 கன மீட்டர் நீரைத் தேக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
வியாசர்பாடி விளையாட்டு வளாகம்
மேலும், வியாசர்பாடி, முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் விளையாட்டு வளாகத்தையும் மேயர் பார்வையிட்டார். 380.07 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1.48 கோடி செலவில் இந்த மூன்று மாடி வளாகம் உருவாகி வருகிறது. இந்த வளாகத்தில் உடற்பயிற்சிக் கூடம், நவீன திறன் மேம்பாட்டு மையம், வரவேற்பு அறை, சேமிப்பு அறை மற்றும் தங்குமிடம் ஆகியவை இடம்பெறும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. இது அப்பகுதி மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
கடும்பாடியம்மன் கோயில் முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வரை, கொடுங்கையூர் பிரதான கால்வாயின் 1,894 மீட்டர் நீளத்திற்குத் தடுப்புச் சுவர் பலப்படுத்தும் பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார். இந்தப் பணிகளுக்கு ரூ.3.18 கோடி செலவிடப்படுகிறது.
இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் மூத்த அதிகாரிகள், மண்டல அதிகாரிகள், உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் உடனிருந்தனர். வளர்ச்சிப் பணிகள் குறித்து மேயர் விரிவாகக் கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications